audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Thursday, July 8, 2021

மத அரசியல்- அத்தியாயம் (01).......................அத்தியாயம் (10)

மத அரசியல்- 
அத்தியாயம் (01)
_______________________________

எழுத்து : C.P.சரவணன்
பகிர்வு : 
____________________________

சமயத் தோற்றம்...!

எல்லா உயிர்களுக்கும் குறிப்பாக மனிதர்களுக்கு பெரிய அச்சத்தை விளைவிப்பது மரணம். முற்கால மனிதன் தன்னுடன் வாழ்பவர்கள் இறந்து போவதைப் பார்த்தான். அவன் அவர்களின் உடல்களைத் தூரத்தே கொண்டு சென்று எறிந்தான். உடம்பில் இருக்கும் ஆவி உடலை விட்டு நீங்குவதே மரணம் என அவன் எண்ணி முடிவு செய்தான். அவன் ஆவி அல்லது உயிர் அழியாது என நம்பினான். உயிர் உடலின் பக்கத்தே தங்கி நிற்கும். அது சில சமயங்களில் உடலிற்புகுந்து உயிர்த்து எழும்.  அது பழையபடி தான் வாழ்ந்த இடத்தை அடையும். அதனால் தீமைகள் உண்டாகும் என்னும் ஒரு புதிய எண்ணம் அவன் மனதில் உதித்தது. பிரேதம் உயிர்தெழும் என்னும் நம்பிக்கையினால் மனிதன் முற்காலத்திற் கையாண்ட வழக்கங்கள் சில இன்றும்  சில மக்களிடையே காணப்படுகின்றன. பிரேதங்களை இடுக்காட்டுக்கு எடுத்துச் செல்லும் போது வீட்டின் வழக்கமான வாயிலால் எடுத்துச் செல்லாது. பிறிதொரு வழியால் எடுத்துச் செல்லும் வழக்கு மக்கள் பலரிடையே உண்டு. இவ்வாறு செய்வது பிரேதம் உயிர்த்தெழின் வீட்டுக்குச் செல்லும் வழியை அறியாமல் இருக்கும்படியாகும். கால் கைகளை கட்டுவதும், அவை எழுந்தாலும் நடக்க முடியாதிருக்கும் படியே. பிரேதங்களுக்குப் பின்னே நெற்பொரி, தேங்காய் துண்டுகளை எறிவது, ஆவிகள் வீட்டுக்குத் திரும்பிவராது அவைகளை உண்டு கொண்டு இடுகாட்டுக்குச் செல்லும்படியேயாகும். இன்னும் பிரேதத்தை புதைத்த பின் அம்பட்டனால் செய்யப்படும் கிரியைகளும் இது தொடர்பானவைதான். கிறிஸ்துவ மதத்தினர் இறந்தவர்கள் உயிர்த் தெழுவார்கள் என இன்றும் நம்பி வருகின்றனர். 
பிரேதத்தைப் புதைத்து அதன் நெஞ்சை ஊடுருவும்படி கூரிய மரக்கட்டையை அறைவதும் முற்கால வழக்கு. இவ்வாறு செய்வது பிரேதம் எழும்பாமல் இருக்கும்படியேயாகும். இங்கிலாந்தின் சில இடங்களில் தற்கொலை புரிந்தவர்களின் பிரேதங்களுக்கு இவ்வாறு செய்யப்படுகின்றன. அதனால் அவன் இறந்தவர்களின் உடல்கள் உயிர்தெழாதபடி அவைகளைப் புதைக்கலானான். இந் நம்பிக்கை வலுவடைந்தபோது பிரேதங்கள் ஆழமான குழிகளில் புதைக்கப்பட்டன. குழிகள் கற்பலகைகளால் மூடப்பட்டன. கற்பலகைகளின் மேல் உயரமாக மண் கொட்டி மேடு செய்யப்பட்டது. மேட்டின் மீது பெரிய கல் வைக்கப்பட்டது. இவ்வாறு செய்தால் புதைக்கப்பட்ட பிரேதம் எளிதில் வெளியே வரமாட்டாது என முற்கால மக்கள் கருதினார்கள்.

இறந்தவர்களின் ஆவிகள் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் தங்கி நிற்கின்றன. அவைகளுக்குப் பசி தாகங்கள் உண்டு. வாழ்நாளில் அவர்கள் பயன்படுத்திய பொருள்களும் அவர்களுக்கு தேவை உண்டு எனவும் மக்கள் எண்ணத்தில் பட்டது. ஆகவே அவர்கள் பிரேதங்களை புதைக்கும் போது உணவையும் நீரையும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் பக்கத்தே வைத்தார்கள். பின்பும் அவ்விடத்தில் உணவையும் நீரையும் வைத்து வருவாராயினர்.

இறந்தவர்களின் ஆவிகள் மக்களுக்கு நன்மையையோ, தீமையையோ செய்ய வல்லன என்றும் அவர்கள் கருதினார்கள். நாட்டில் நோய், பிணி, பஞ்சம் போன்ற துன்பங்கள் நேர்ந்த காலத்தில் அவை ஆவிகளின் கோபத்தினால் உண்டாயின என்று அவர்கள் நம்பினார்கள். ஆகவே அக்காலங்களில் ஆவிகளுக்குச் சிறப்பாக உணவும் நீரும் (பலி) வழங்கப்பட்டன. சில தலைமுறைகள் கழிந்தன. இறந்தவர்களைப் பற்றிய நினைவுகள் மறக்கப்பட்டன. அப்பொழுது இறந்தவர்களின் சமாதிகள் சிறு தெய்வங்களாகவும் கிராம தெய்வங்களாகவும் மாறின. குடும்பத்தவரின் ஆவிகள் இல்லற தெய்வங்களாயின. குடும்பத் தலைவனின் ஆவி (குடும்ப) தெய்வமாயிற்று. அதிகாரியின் ஆவி கிராம தெய்வமாயிற்று. அரசனின் ஆவி நாட்டு மக்களின் தெய்வமாயிற்று. சமாதிகள் வைக்கப்பட்ட கற்களே ஆவி உறையும் இடங்களாக கருதப்பட்டன. அவைகளின் முன் பலிகள் இடப்பட்டன. இவ்வாறு தென் புலத்தார் (இறந்தவர்) வழிபாடே முதலில் தோன்றி இருந்தது. பின்பு தென்புலத்தார் தெய்வமாயினர். இது பற்றியே வள்ளுவனார் 'தென்புலத்தார் தெய்வம்" என கூறினாரென்க. இன்றும்  மலையாளத்தில் தெற்கட்டு என்னும் வீட்டின் ஒரு பகுதியில் இறந்தவர்களின்  சாம்பல், அவர்கள் பயன்படுத்திய கைத்தடி முதலியன வைத்து வழிபடப்படுகின்றன.

சமயம் என்றவுடன் தெய்வம், பூசாரி, பலி, வழிபடுபவன் என்னும் நான்கின் தோற்றங்களும் நமது அகத்தே எழுகின்றன. இந்நான்கின் சேர்க்கையை சமயம் என்னும் கருத்து மக்கள் உள்ளத்திற்பதியலாயிற்று.

*தெய்வங்களின் வடிவம்...!*

சமாதிக் கற்களே தெய்வம் உறையும் இடமாக வைத்து வழிபடப்பட்டன. கற்களை வழிபட்ட மக்கள் இறந்தவர்களை கற்களில் செதுக்கி வைத்தும் வழிபடுவாராயினர். இம் முறையினால் கற்களின் இடத்தைக் கற்களில் செதுக்கப்பட்ட ஆண் பெண் உருவங்கள் ஏற்றதும் உண்டு.

*மர வணக்கத்தின் தோற்றம்...!*

இறந்தவர்கள் வணக்கத்தை ஒப்ப மர வணக்கமும் இவ்வுலகம் முழுமையிலும் பரவியிருந்தது. மக்கள் மரங்களைத் தெய்வங்களாக வழிபடுவதில்லை. அம்மரங்களில் தெய்வங்கள் உறைவதாகக் கருதி அவைகளையே வழிபடுகின்றனர். பிரேதம் புதைக்கப்பட்ட இடத்தில், முளைத்து வளரும் மரங்கள் இறந்தவரின் அல்லது அவரின் ஆவிகள் உறையும் இடங்களாகக் கருதப்பட்டன. பிரேதங்களைப் புதைத்தப்பின் அவ்விடங்களில் மரங்களை அல்லது மரக்கிளைகளை நாட்டும் வழக்கு இன்றும் பல  மக்களிடையே காணப்படுகின்றது. ஆகவே இறந்தவர்கள் ஆவிகளுக்குச் செய்யப்படும் வழிபாட்டை ஒப்ப இம்மரங்களும் பலி கொடுத்து வழிபடப்பட்டன.

 மத அரசியல் - அத்தியாயம் (02)

_____________________________

எழுத்து : C.P.சரவணன்
பகிர்வு : 
_____________________________

ஆதியில் மதம் தோன்றியதற்கான சில காரணிகளைப் பார்ப்போம்...!

(1) அச்சம்

காய்கனி கிழங்கு முதலிய இயற்கை விளைபொருளையும் வேட்டையாடி விலங்கு பறவை இறைச்சியையும் உண்டு வாழ்ந்து, அநாகரிக நிலையிலிருந்த முந்தியல் மனிதன் தீயும் இடியும் போன்ற பூத இயற்கைக்கும், பாம்புபோலும் நச்சுயிரிக்கும், இறந்தோர்களுக்கும்,  பேய்கட்கும், அஞ்சிய அச்சமே தெய்வ வணக்கத்தை அல்லது சிறுதெய்வ மதத்தை முதற்கண் தோற்றுவித்தது. அதனால், கொல்லுந் தன்மையுள்ள எல்லாவற்றையும் தெய்வமாகக் கொண்டு, அவை தம்மைக் கொல்லாவாறு இயற்கையும் செயற்கையுமாகிய உணவுப் பொருள்களைப் படைத்தும், இருதிணை யுயிரிகளையும் காவு கொடுத்தும், வந்தனர்.
நாகரிகம் முதிர்ந்துள்ள இக்காலத்தும், இம்மையிலும் மறுமையிலும் நேரக்கூடிய துன்பங்கட்கு அஞ்சுவதே, பல்வேறு மதவொழுக்கங்கட்கும் பெரும்பாலும் அடிப்படைக் காரணியமாயிருக்கின்றது.    அச்சத்தினாற் படைப்பதெல்லாம் தீமை விலக்கலைக் குறிக் கோளாகக் கொண்டது.

(2) முற்காப்பு

மாந்தன் வாழ்க்கை பல்வகைத் துன்பம் நிறைந்ததனால், அவற்றினின்று தப்புவதற்குத் தொன்றுதொட்டுப் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டியதாயிற்று. உடமைகளையும் உயிரையும் காப்பதற்கு முன்பு காவற்காரனும் பின்பு அரசனும் ஏற்பட்டனர். ஆயின், மக்களால், தடுக்க முடியாத கொள்ளைநோய், பஞ்சம், கடுங்காற்று, பெருவெள்ளம் முதலிய துன்பங்களைத் தடுத்தற்கும் நீக்கற்கும், மாந்தரினத்திற்கும் மேற்பட்ட சில மறைவான தெய்வங்களே ஆற்றலுள்ளவை என்று கருதி, அனைவரும் அவற்றை வணங்கவும் வழிபடவும் தலைப்பட்டனர். அத் துன்பங்கள் அத் தெய்வங்களின் சீற்றத்தால் நேர்வன வென்றும் நம்பி, அவற்றிற்கு அஞ்சினர். ஆதலால், முற்காப்பு அச்சத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். தீயும் பாம்பும் பேயும் என்றும் உள்ளன. கொள்ளைநோய், பஞ்சம் முதலியன ஒரோவொரு காலத்து நிகழ்வன.

(3) நன்றியறிவு

பல்வேறு தீங்குகட்கும் அச்சங்கட்கும் பெரிதும் இடந்தரும் காரிருளைப் போக்கி, உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு  தேடவும் இனத்தாருடன் உறவாடவும், பேரளவாக உதவும் கதிரவனையும் சிற்றளவாக உதவும் திங்களையும்; உண்ணக் காய்கனியும் தங்கத் தண்ணிழலும் குடியிருக்க உறையுளும் உதவும் பல்வகைப் பழுமரங்களையும்; இளமை முதல் முதுமைவரை எல்லார்க்கும் இன்னுயிர்த் தீம்பால் உதவும் ஆவையும், இன்னோ ரன்ன பிறவற்றையும், தெய்வமாகப் போற்றியதும் வணங்கியதும் நன்றியறிவு பற்றியதாகும். அவ்வகை வணக்கத்தைக் குறித்த காலந் தொறும் தொடர்ந்து செய்வது, மேன்மேலும் நன்மை பெறலைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். வணக்க மெல்லாம் படைப்பொடு கூடியதே.

(4) பாராட்டு

இனத்தைக் காக்கப் பகைவருடன் புலிபோற் பொருதுபட்ட, உயிரீகி (பிராணத்தியாகி)யாகிய தறுகண் மறவனுக்கும்; மழை வருவித்தும், பழுக்கக் காய்ச்சிய பொன்னைக் கையிலேந்தியும், தீயோரைச் சாவித்தும், சினத்தால் ஊரை யெரித்தும், உடன்கட்டை யேறியும், கடுங்கற்பைக் காத்த பத்தினிப் பெண்டிற்கும்; கல் நட்டி விழா வெடுத்தது பாராட்டுப் பற்றியதாகும்.

     "தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்     
      பெய்யெனப் பெய்யும் மழை"    (குறள். 55)

என்னுங் கூற்று, ஒருசில நிகழ்ச்சிகளையேனும் சான்றாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

பட்டவன் கல்லும் பத்தினிக் கல்லும் இனத்தார் அல்லது பயன் பெற்றவர் நட்டுச் சிறப்புச் செய்வது, நன்றியறிவையும் ஒருமருங்கு தழுவியதே.

தீயானது, கொல்லுந்தன்மையால், அச்சத்திற்கும், இருள் போக்கியும் உணவு சமைக்க உதவியும் கொடுவிலங்குகளை வெருட் டியும் குளிரகற்றியும் நன்மை செய்வதால் நன்றியறிவிற்கும் உரிய தாயிற்று.

(5) அன்பு

இருதிணைப் பகையையும் அழித்தும், உணவிற்கு வழிவகுத்தும், நடுநிலையாக ஆட்சி செய்தும், குடிகளை அரவணைத்துக் காத்த அரசன் இறந்தபின், அவனுக்குப் படிமையமைத்துப் படைத்து வணங்கியது அன்பு பற்றியதாகும். இதினின்றே, விண் ணுலக வேந்தன் (இந்திரன்) வணக்கம் தோன்றிற்று.

(6) கருதுகோள்

முதற்காலத்திற் குறிஞ்சிநிலத்திலேயே வாழ்ந்த மாந்தர், பின்னர் ஏனை நிலங்களிலும் பரவியபின், அவ்வந் நிலத்திற்கேற்ப ஒவ்வொரு தெய்வந் தோன்றிற்று. அதன்பின், ஒவ்வொரு பெரு நிலத்திற்கும் பேராற்றிற்கும் பெருந்தொழிலுக்கும் பெருநன்மைப் பேற்றிற்கும், காதற்பண்பிற்கும், சாதல் தீங்கிற்கும் ஒவ்வொரு தெய்வம் இருப்பதாகக் கருதப்பட்டது.

கண்ணாற் காணும் இயற்கைக் கூறுகளும் நிகழ்ச்சிகளும் தோற்றங்களும் ஆவிகளும் வினைகளுமன்றி, மனத்தாலேயே படைத்துக் கொள்ளும் தெய்வங்களெல்லாம் கருதுகோளின் விளைவேயாகும்.    நீரூட்டியும் நீராடுவித்தும் உணவு விளைத்தும் பல்வகை யுதவும் ஆற்றை நன்றியறிவுபற்றி வணங்குவது வேறு; 

(7) அறிவு வளர்ச்சி

மாந்தன் நாகரிகமடைந்து அறிவுவளர்ந்து பண்பாடுற்றபின், மறுமையும் கடவுளுண்மையுங் கண்டு, பல்வேறு மதங்களையும் சமயங்களையும் வகுத்தது   அறிவு வளர்ச்சியாகும்.

மக்கள் மனப்பாங்கும் அறிவுநிலையும் பல்வேறு வகைப்பட் டிருப்பதால், மத சமயங்களும் பல்வேறாயின.

அறிவுவளர்ச்சி யென்னும் பெயருக்கு முரணாக, பல்வேறு மூடப்பழக்கங்களும் கொள்கைகளும் மதங்களிற் கலந்திருப்பதுண் மையே. அவை பெரும்பாலும் பழங்காலத் தன்மையாலும் தன்னலக் காரரின்  சூழ்ச்சியாலும் ஏற்பட்டவை. இக்கால அறிவு நிலைக் கேற்ப, அவற்றை இயன்றவரை நீக்கிக் கொள்ளல் வேண்டும்.

மதமும் சமயமும் பெரும்பாலும் நம்பிக்கையைப் பொறுத்தன

மூவகை மதம்...!

மக்களின் அறிவுநிலைக்கேற்ப, 

(1) சிறுதெய்வ வணக்கம்

(2) பெருந்தேவ மதம் 

(3) கடவுள் சமயம்

 என மதம் மூவகைப்படும்.

இம்மை நலத்தை மட்டும் நோக்கி, இன்பக்காலத்திலும் துன்பக் காலத்திலும். ஐம்பூதமும் ஆவிகளும் போன்ற சிறுதெய்வங் கட்கு உணவு படைத்துக் காவு கொடுப்பது, சிறுதெய்வ வணக்கம்; சிவன் அல்லது திருமால் என்னும் பெயரால் இறைவனை நாள் தோறும் வழிபட்டு, உயிர்க்கொலை நீக்கிக் காய்கனிமட்டும் படைத்து, அவ்வவ் மத அடையாளந் தாங்கி, இருதிணை யுயிருக்கும் தீங்கு செய்யாது இயன்றவரை நன்மையே செய்தொழுகுவது, பெருந்தேவ மதம்; எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை உருவ வணக்கமின்றி உள்ளத்திலேயே வழிபட்டு, தன்னையே படைத்து, முக்கரணமுந் தூய்மையாகி, இல்லறத்தி லேனும் துறவறத்திலேனும் நின்று, இயன்றவரை எல்லாவுயிர் கட்கும் நன்மையே செய்து, இம்மையிலேனும் மறுமையிலேனும் வீடுபெற வொழுகுவது, கடவுள் சமயமாம்.

சிறுதெய்வ வணக்கத்திற்கு உருவம் இன்றியமையாதது; பெருந்தேவ வழிபாட்டிற்கு, அது வழிபடுவாரின் அகக்கரண வளர்ச்சிக் கேற்றவாறு, இருந்தும் இல்லாமலும் இருக்கலாம்.

குமரிநாட்டு மதநிலை...!

மேற்கூறிய மூவகை மதநிலையும், கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன்பே குமரிநாட்டுத் தமிழ் மக்கள் கொண்டிருந்தனர். ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலம் தோரா. கி.மு. 1500. அவர் மதம் கொலைவேள்விச் சிறுதெய்வ வணக்கம். தமிழரொடு தொடர்பு கொண்ட பின்னரே, சிவ மதத்தையும் திருமால் மதத்தையும் தழுவினர். ஆதலால், அவரின் வேதாகம இதிகாச புராணக் கதைகளை யும் புரட்டுகளையும் நம்பி, அவையே சிவநெறிக்கும் திருமால் நெறிக்கும் அவற்றின் கொண்முடிபுகட்கும்(சித்தாந்தங்கட்கும்) மூலமெனக் கூறுவது, இவ் விருபதாம் நூற்றாண்டிற்கு  எட்டுணையும் ஏற்காது. 


*(தொடரும்)*


மத அரசியல் - அத்தியாயம் (03)

_____________________________
எழுத்து : C.P.சரவணன் 
பகிர்வு : 
_____________________________

ஜூடாயிஸம் (Judaism)...!

ஜூடாயிஸம் - யூதர்களின் மதம், கிறித்துவ மதத்தைவிட பழைய ஏற்பாட்டில் உள்ள கருத்துகளின் அடிப்படையில் உருவான இந்த மதம் ஒரே இறைவனைப் பற்றி பேசுகிறது. அவர் தான் உலகத்தைப் படைத்தவர். அவர்தான் உலகை ஆள்பவர். அவர் சர்வ சக்தியுள்ளவர். எதையும் அறிந்தவர். எங்கும் நிறைந்தவர் மேலும் அவர் நியாயமானவர். கருணை உள்ளவர். ஒவ்வொருவரும் கடவுளின் பிம்பமாகத் தான் படைக்கப் பட்டிருக்கிறார்கள் போன்றவை யூதர்களின் நம்பிக்கை.

ஜூடாயிஸம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னரானது. இது தூய்மை. நல்லொழுக்கம ஆகியவற்றுக்கு உதாரணமாக இருக்கத்தக்க மனிதர்களைப் படைக்க வேண்டும் என்று கருதியே இறைவன் யூதர்களைப் படைத்ததாக ஒரு நம்பிக்கை யூதர்களிடம் உண்டு.  கி.மு. 1812ஆம் ஆண்டு ஆதாம் ஏவாளின் பத்தொன்பதாவது  தலைமுறையில் உதித்த பேரன் ஆபிரகாம்.  இவர் யூத இனத்தின் தந்தையாகப் போற்றப்படுகிறார். இஸ்ரேலின் யூத இனம் இவரில் இருந்துதான் தோன்றியது. அவர்களின் கடவுள் யாவே (YHWH/Yahweh), அவர் முன்பாகத் தோன்றி, யூத இனத்தின் தலைவராக உன்னை நியமிப்பேன் என்று வாக்களித்தார். இந்த வாக்குறுதியை உறுதியென்று நம்பிச் செயல்பட்டார் ஆபிரகாம். 

ஆபிரகாம் தன் மகன் ஈசாக் பிறந்த எட்டாம் நாளன்று அவருக்கு விருத்தசேதனம் செய்து வைத்தார். விருத்தசேதனம் என்றால் சுன்னத் என்று பொருள். ஆபிரகாமிற்கு கடவுள் அளித்த வாக்குறுதியை ஈசாக் பிறப்பின் மூலமாக நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.  தாங்கள் ஆபிரகாமின் மரபு வழித் தோன்றல்கள் என்பதில் யூதர்கள் மிகவும் பெருமிதம் கொள்கின்றனர். நாங்கள் ஆபிரகாமின் வம்சாவழியினர் யாருக்கும் அடிமையாக இருந்தது கிடையாது. இருக்கப்போவதும் இல்லை என்று இயேசுவிடம் யூதர்கள் வாதம் செய்தனர்.

அவரது அன்பு மனைவி சாரா. இருவருக்கும் குழந்தை பாக்யம் கிட்டாத காரணத்தால் ஆகார் என்னும் வேலைக்காரப் பெண்ணை சாராவே ஆபிரகாமுக்கு மணமுடித்து வைத்தார்.  ஆபிரகாம் - ஆகாருக்கு இஸ்மாயில் என்னும் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.  இதன்பின்னர் அதிர்ஷ்டவசமாக சாராவுக்கு குழந்தை பேறு கிடைத்தது. அந்த ஆண் மகனுக்கு ஈசாக் என்று பெயர் சூட்டப்பட்டது.  இதன்பின்னர் சாராவுக்கும், ஆகாருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு சண்டையாக வளர்ந்தது. இதனையடுத்து தனது குழந்தை இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள் ஆகார். இவர்களின் தகராறு உலகின் மிகப் பெரிய இரு மதங்கள் உருவாகுவதற்கு வழிவகுத்துவிட்டது என்பதே வரலாற்று உண்மை.  அதாவது ஈசாக்கின் வழிவந்தோர் யூதர்கள் என்று அழைக்கப்பட்டனர். இஸ்மாயில் வழித்தோன்றல்கள் அரேபியர்கள் ஆனார்கள். 


யூதர்களின் புனித நூல் தோரா (Torah). கிறிஸ்தவர்களின் புனித நூல் பழைய ஏற்பாடு. முஸ்லீம்களின் குர் ஆன் ஆகிய மூன்று புனித நூல்களும் இதனைத் தெரிவிக்கின்றன. எகிப்து நாட்டில் ஈசாக்கின் வம்சத்தினர் கொடுமைப்படுத்தப்பட்டனர். அப்போது கடவுளின் கட்டளையின் பேரில் அங்கு  தோன்றிய இறைதூதர் மோசஸ் அவர்களை மீட்டார். மேலும், யூதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உலகிற்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, இறைவழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து கட்டளைகளை மோசஸ் அவர்களுக்கு வழங்கினார்.  இது இறைவனின் கட்டளை என்பதையும் மோசஸ் தெளிவாக்கினார்.

இந்தப் பத்து கட்டளைகளின்படி தங்களுக்கு கடவுள் ஒருவர் மட்டுமே என்று யூதர்கள் நம்பினர். யூத மதம் மிகப் பழமையானது என்பதால் அதில் சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும் குறைவே இல்லை. நிறைய விழாக்கள் உண்டு. வழிபாடுகள் அதிகம் தங்கள் சடங்குகளின்  போது முன்னோரின் துயரங்கள் நினைத்துப் பார்க்கப்பட்டது. திருமண விழா உட்பட அனைத்து சடங்குகளிலும் இது அவர்களின் முக்கிய சடங்காக இருந்தது.

கடவுள் இந்நிலவுலகைப் படைத்தபோது உயிரினங்கள் உட்பட அனைத்தையும் முதல் ஆறுநாட்கள் படைத்தார் என்றும், ஏழாவது நாள் நன்றாக ஓய்வெடுத்தார் என்றும் யூதர்கள் நம்பினர்.  எனவேதான் வாரத்தில் ஆறு நாட்கள் ஓய்வின்றி உழைக்கும் யூதர்கள், ஏழாவது நாளான சனியன்று நல்ல ஓய்வெடுப்பார்கள். யார் அழைத்தாலும் வேலை எதுவும் செய்யவே மாட்டார்கள். சமையலுக்குக்கூட விடுமுறைதான். தேவையான சமையலை முதல் நாளே முடித்து வைத்துவிடுவர்.  ஆபிரகாம் மீதான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட மதங்கள் தான் யூதம், கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம். இம் மூன்று மதங்களுமே ஒரே கடவுள் என்னும் கொள்கையைக் கொண்டவை. ஆயினும் காலப்போக்கில் இம்மதங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று பகைமை பாராட்டத் தொடங்கி எதிரிகள் ஆகின.

இவர்களுக்கு இடையே பகை ஏற்படுவதற்கு முழுமூல காரணம் எதுவென்றால் இஸ்ரேலின் வசமுள்ள ஜெருசலேம் நகரம் தான். இம்மூன்று மதங்களின் முக்கிய சங்கமங்கள் நடைபெறும் புனித நகரமாக விளங்குகிறது ஜெருசலேம். பாலஸ்தீனத்தில் தலைநகராக ஜெருசலேம் விளங்குவதை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஏனென்றால் யூதர்களின் மிக முக்கிய புனித நகரமாக ஜெருசலேம்  விளங்குகிறது. வெளி நாடுகளில் வசிக்கும் யூதர்கள் கூட தாங்கள் பிரார்த்தனை செய்யும்போது ஜெருசலேம் நகரம் இருக்கும் திசையை நோக்கித் தான் வணங்குகிறார்கள்.

யூதர்கள் கடவுளை பிரார்த்தனை செய்கிறபோது நான் எனது என்று கூறமாட்டார்கள் நாம் நமது என்றுதான் கூறுவார்கள். ஒரு இடத்தில் யூதன் ஒருவன் நுழைந்து விட்டால் போதும் அடுத்த சில நாட்களில் அங்கு யூதர்கள் குவியத் தொடங்கி விடுவார்கள். இப்படி தான் மட்டுமே வளராமல், தம் இனத்தையும் வளர்த்தார்ள். ஒரு இடத்தில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றால் அங்கு யூதர்களும் அதிகரித்துவிடுவார்கள். யூதர்கள் வட்டித் தொழிலில் ஈடுபட்டவர்கள். அதுவும் அவர்கள் மேல் வெறுப்பு வளர்வதற்குக் காரணமாக அமைந்துவிட்டது.

தங்கள் இனமே உலகில் உயர்ந்த இனம் என்றும், கடவுளின் விருப்பத்திற்குரிய இனம் தங்கள் இனமே என்றும், உலகில் மனித இனம் எப்டி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகவே கடவுள் தங்களை படைத்தார் என்றும் அவர்கள் முழுமையாக நம்பினர்.  கி.மு.பத்தாம் நூற்றாண்டில் இருந்தே இந்நகரில் யூதர்கள் அதிக அளவில் வசித்தனர். இங்குள்ள டெம்பிள் மவுண்ட் கோயில் யூதர்களுக்கு மிகவும் முக்கியமானது. விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை இந்த ஆலயத்துக்குக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்கிறது யூதர்களின் புனித நூல். அதிக அளவு விளைச்சல் என்றால் பிறருடன் பங்கிட்டுக் கொள்ளலாம் என்பதும் விதி. 


டெம்பிள் மவுண்ட் கோயில் சாலமோன் மன்னனால் கி.மு.957 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. வரலாற்றைப் புரட்டி பார்த்தால் இக்கோயில் பலமுறை இடிக்கப்பட்டும், பின்னர் கட்டப்பட்டுமாக இருந்துள்ளது. தற்போது இக்கோயில் இருந்த நினைவாக ஒரு சுவர் மட்டுமே காணப்படுகிறது. அதனையே யூதர்கள் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கடவுள் வானத்தையும் பூமியையும் இன்னும் பல கோள்களையும் படைத்தார்.  இவை அனைத்தையும் ஆளும் அதிகாரத்தை மனிதன் மீது நம்பிக்கை வைத்து அளித்தார்.

*சாலமோன்

அப்போது கடவுள் மனிதனோடு நேரில் தொடர்பு கொண்டிருந்து அவனது துன்பங்களுக்கு உற்ற வழிகாட்டதலைச் செய்து வந்தார். சில தீர்க்கதரிசிகள் மூலம் மனிதர்கள் வாழ வேண்டிய நல்ல வழிமுறைகளைக் கட்டளைகளாக அளித்தார்.  அதில் குறிப்பிடத்தக்கவர் சாலமோன் ஒன்றிணைந்த யூத இஸ்ரேல் நாட்டின் மன்னர்களில் ஒருவர் என்று விவிலிய நூல்கள் குறிப்பிடுகின்றன.

*தால்முத்

இவர் 48 இறைவாக்கினருள் ஒருவர் என்கிறது யூத சமய நூல் தால்முத் (Talmud). மன்னர் தாவீது மற்றும் அரசி பத்சபா ஆகியோரின் மகனாகப் பிறந்தவர் சாலமோன். வட பகுதியாக இருந்த இஸ்ரேலையும், தென் பகுதியாக இருந்த யூதத்தையும் ஒருங்கே இணைத்து வலுவான நாடாக மாற்றியவர் தாவீத்.

இவருக்கு முன்பாக சவுல் இஸ்ரேலின் மன்னராக இருந்தார். சவுல், தாவீத்திற்குப் பின்னர் அதன் மூன்றாவது மற்றும் கடைசி மன்னராக இருந்தவர் சாலமோன்.  சாலமோன் ஆட்சிக்குப்பிறகு அந்நாடு இஸ்ரேல் என்றும், யூத நாடு என்றும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டன. சாலமோனின் ஆட்சிக்காலம் கி.மு. 970 முதல் கி.மு 931 வரை என்று தெரிகிறது. சாலமோன் முதன்மையான இறைவாக்கினர் என்கிறது குர்ஆன். சாலமோன் மிகச் சிறந்த ஞானி என்கிறது விவிலியம்.  சாலமோன்தான் ஜெருசலேமில் புகழ்மிக்க முதல் கோயில் கட்டினார். டெம்பிள் மவுண்ட் மவுண்ட் சீயோன் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. இது கி.மு. 900 ஆண்டுகளில் கட்டப்பட்டது. கி.மு. 586 ஆம் ஆண்டு பாபிலோனியர்கள் இதனை இடித்து துவம்சம் செய்தனர். தீயிட்டுக் கொளுத்தினர். யூத இளைஞர்களை அடிமைகளாக்கி தங்கள் நாட்டிற்குக் கொண்டு சென்றனர். இதனால் யூதர்கள் நம்பிக்கை இழந்து விரக்தியின் எல்லைக்கே சென்றனர். மிகுந்த மனவேதனையில் தத்தளித்தனர். அப்போது தோன்றிய  தீர்க்கதரிசிகள் தாவீதின் கோத்திரத்தில் இறைதூதர் 'மேசியா" தோன்றுவார். அவர் யூத நாட்டை சிறப்பாக ஆட்சி செய்வார். யூத மதத்தைக் கட்டி காப்பார். சாலமோன் கோயிலைத் திரும்பவும் கட்டி எழுப்புவார்' என்றனர்.

இது யூதர்களுக்குப் புத்துணர்ச்சியைத் தந்தது. ஒரு நம்பிக்கை உதித்தது. மன வலிமை கிடைத்தது. இறைதூதர் அரச வம்சத்தில் உதிப்பார் என்ற உறுதியான நம்பிக்கையோடு மீண்டும் வலிமை பெறத் தொடங்கினர். இந்நிலையில் பாபிலோனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடிமையாக இருந்து யூதர்களுக்கு விடுதலையும் கிடைத்தது. கி.மு. 516 ஆம் ஆண்டு மீண்டும் ஜெருசலேமில் சாலமோன் கோயிலைக்கட்டி எழுப்பினர்.  மீண்டும் கி.மு. 43 ஆம் ஆண்டு யூதர்கள் மிகப் பெரிய கிளர்ச்சியில் இறங்கினர். ஆனால் அதுவும் ஆட்சியாளர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டது. கி.மு. 20 ஆம் ஆண்டு மகா ஏரோது என்பவர் ஜெருசலேம் கோயிலை பெரிய அளவில் விரிவாகக் கட்டியெழுப்பினார். இரண்டாம் கோயில் என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட இங்கு யூதர்களின் வழிபாடு மீண்டும் தொடங்கின. இக்கோயில் கட்டுமான பணிகள் 46 ஆண்டுகளாக நடந்தது என்கிறது விவிலியம்.

இந்நிலையில் டைட்டஸ் என்னும் ரோமத் தளபதியின் தலைமையில் ஜெருசலத்திற்கு கி.பி.70 ஆம் ஆண்டு ரோமானியப் படை புகுந்து இந்த ஆலயத்தைத் தகர்த்தெறிந்தது. ஒரேயொரு சுவர் மட்டுமே அதிலிருந்து தப்பித்தது. இந்த மேற்குச் சுவர்தான் இப்போதும் யூதர்கள் வழிபடும் புனிதக் கோயிலாக இருந்து வருகிறது. இந்த சுவற்றுக்குத் தான் அவர்கள் வழிபாடு செய்கின்றனர். தங்கள் கடவுளின் கட்டளைப்படி தேவதூதர் ஒருவர் இந்த மண்ணில் அவதரிப்பார் என்றும், இடிக்கப்பட்ட ஆலயத்தை அவர் மீண்டும் கட்டி எழுப்புவார் என்றும் யூதர்கள் இப்போதும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ஒரு வரலாற்று உண்மையை நாம் மறுபடியும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். யூதர்கள் இயேசு பிரானை தங்கள் கடவுளின் ஆணைப்படி தோன்றிய இறைதூதர் என்பதை ஏற்க மறுத்தனர். இந்நிலையில்தான் இயேசு கிறிஸ்து அவதரித்தார். இவர் தான் தங்களின் இறைதூதர்  மேசியா என்று சிலம் நம்பத் தொடங்கினர்.  ஆனால் மற்றவர்களோ இதை நம்பத் தயாராக இல்லை. தாவூதின் அரச குடும்பத்தில் தான் மேசியா பிறப்பார் என்றும் தொழுவத்தில் பிறந்த இயேசு நிச்சயமாகத் தாங்கள் எதிர்பார்க்கும் மேசியா கிடையாது என்றும் உறுதியாக நம்பினர். இயேசு யூத இனத்தைச் சார்ந்தவராக இருந்தும், அரச குடும்பத்தில் பிறக்காத காரணத்தால் அவரை மேசியா என்று நம்ப மறுத்தார்கள்.

இயேசுவிடம் மகா சக்தி இருந்ததையும், அதன்மூலம் மக்களுக்கு அவர் நற்போதனைகளை வழங்கியதையும் யூதர்களில் பலர் வெறுத்தனர். தங்களின் மேசியா நிச்சயமாக அவதரிப்பார் என்றும், தன்னை இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்ளும் இயேசுவைக் கொன்றுவிட வேண்டும் என்றும் அவர்கள் துடித்தனர். ஜெருசலேத்தை ஆட்சி செய்த ரோமானியர்களிடம் இயேசுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்லி அவரைச் சிலுவையில் அறைந்து தங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.

இயேசுவைக் கொன்றவர்கள் யூதர்கள் என்ற கருத்து அப்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவியது. இதுவே யூதர்கள் மீது உலக மக்கள் வெறுப்பு கொள்வதற்கும் காரணமாக அமைந்தது. ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் யூத மக்களை வெறுத்து, லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்ததற்கு இதுவே முக்கிய காரணம். இது முதல் யூதர்கள் இன்றளவும் உலக மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டே இருந்து வருகிறார்கள். இன்றும் இயேசுவை தங்கள் தீர்க்கதரிசிகள் கூறிய மேசியா என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. எப்படியும் இறைத்தூதர் மேசியா பிறந்து வந்து தங்கள் கோயிலைக் கட்டி எழுப்புவார் என்று இன்றும் யூதர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

இவரது ஆட்சிக் காலத்தில் புகழ்மிக்க கட்டடங்கள் பல கட்டப்பட்டன. பேரமைதி நிலவியது செல்வம் செழித்தோங்கியது. சேபா நாட்டு அரசியார் சாலமோனின் அறிவுத்திறனைப் பற்றிக் கேள்விப்பட்டு விலை உயர்ந்த பரிசுகளை வழங்கினார். இவருக்கு எழுநூறு அரசகுலத் பெண்கள் மனைவியராகவும், முன்னூறு பெண்கள் வைப்பாட்டிகளாகவும் இருந்தனர். சாலமோனின் முதுமை காலத்தில் இப்பெண்கள் அவரை தவறான வழியில் திருப்பி விட்டனர். அதாவது வேற்று தெய்வங்களை வணங்குமாறும், பின்பற்றுமாறும் தூண்டிவிட்டனர். சீதோனியரின் தேவதையான அஸ்தரேத்தையும் அம்மோனியரின் அருவருப்பான மில்க்கோமையும் வழிபடலானார்.

இதனால் தனது தந்தை தாவீத் ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியதைப் போல் இல்லாமல் இருந்து விட்டார். யாவே என்னும் உண்மைக் கடவுள் வழிபாட்டை மறந்து தம் மனைவியரின் தெய்வங்களை வழிபட்டார் சாலமோன். சிலை வழிபாட்டை ஆதரித்தார். எனவே கடவுள் அவரை தண்டித்தார் என்கிறது விவிலியம். சாலமோனின் இறப்புக்குப் பிறகு அவரது மகன் ரெகோபெயம் ஆட்சி செய்ததாக விவிலியம் கூறுகிறது. இவரது ஆட்சிக் காலத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டு இஸ்ரேல் இரண்டாக உடைந்து சிதறிப்போனது. கடவுள் கட்டளைகளை உதாசீனப்படுத்திய ரெகோபெயம், வேறு கடவுள்களைத் தொழ அரம்பத்தார். இதனால் இஸ்ரேல் மீது வேற்று நாட்டவர்கள் தாக்குதலைத் தொடுத்தார்கள்.

அடுத்த  150 ஆண்டுகளுக்குள் இஸ்ரேல் முழுவதும் வேற்றுநாட்டவர்களுக்கு அடிமையானது. அதாவது கி.மு 705 ஆம் ஆண்டு முதல் யூத சாம்ராஜ்யம் சரிந்து போனது. பின்னர் கி.மு 586-ஆம் ஆண்டு யூத இனத்தைச் சேர்ந்த செதேக்கியா என்னும் மன்னனை பாபிலோன் மன்னன் சிறைப் பிடித்து அவரது இரு மகன்களையும் படுகொலை செய்தான். இந்த வீழ்ச்சி யூத இனம் முழுவதையும் பெருமளவில் பாதித்தது. ஜெருசலேத்தில் இருந்த ஆலயம் இடிக்கப்பட்டு, பொன் பொருள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது. யூதர்களின் கலாச்சாரம் நசுக்கப்பட்டது. இதன்பின்னர் யூதர்களின் ஆளுகை அந்நிய மன்னர்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்படடது. ஆனாலும் யூதர்கள் தங்களின் ஆலயத்தை மீண்டும் புதுப்பிக்க விரும்பி செருபாபேல், எஸ்றா, நெகேமியா போன்ற தலைவர்கள் வேறு சில மன்னர்களின் உதவியைப் பெற்று ஆலயத் திருப்பணியைத் தொடங்கினர். அப்போது யூத மக்கள் தங்கள் கடவுளை வணங்குவதை விட்டு வேறு தவறான பழக்கங்களில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இத்தலைவர்கள் கி.மு. 400 ஆம் ஆண்டுகளில் யூதர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி மீண்டும் அவர்களைத் தங்கள் கலாச்சார பாதைக்குக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தினர். இதனிடையே கிரேக்க மன்னர்களின் வழிபாட்டு முறைகளை இஸ்ரேலியர்கள் பின்பற்றுமாறு ஆட்சியாளர்கள் கட்டாயப்படுத்தினர். யூதர்களின் நடைமுறைகள் தவறான பழக்கமாகவும், அதனை கடைபிடிப்பது பெருங் குற்றமாகவும் கருதப்பட்டது.  தங்கள் கலாச்சாரத்தின் அடித்தளத்துக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதை உணர்ந்த யூதர்கள் ஆத்திரமுற்றனர். ஆட்சியாளர்களுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர். 

இதனால் கிரேக்கர்கள் தாங்கள் திணிக்க முயன்ற நெருக்கடியைக் குறைத்துக் கொண்டதால், யூதர்கள் மீண்டும் தங்கள் வழிபாட்டு முறைகளைத் தொடர முடிந்தது. ஆனாலும், இது அதிக காலத்துக்கு நீடிக்கவில்லை. காரணம் அடுத்தப்படியாக இவர்கள் ரோமானியர்களின் அதிகாரத்தின் கீழ் வந்தனர். அவர்கள் கிரேக்கர்களைவிடவும் மோசமாக நடந்து கொண்டனர். அடக்குமுறைகளைத் தாராளமாக ஏவிவிட்டனர். யூதர்கள் நசுக்கப்பட்டனர். ரோமானியர்களின் ஆட்சித்தான் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்துவிட்டது. அப்போதுதான் தேவதூதர் இயேசு பிரான் அவதரித்தார்.

யூத மதத்தில் உள்ள கண்மூடித்தனமான நம்பிக்கைகளை இயேசு ஏற்கவில்லை. இது யூதர்களுக்குப் பெரும் கோபத்தை வரவழைத்தது. அவரை எதிர்க்கத் தொடங்கினர். மோசஸால் தங்களின் குடியேற்ற பகுதியாக அமைந்த இஸ்ரேல்தான் உலகின் புனிதபூமி என்ற ஆழ்ந்த நம்பிக்கையை யூதர்கள் கொண்டுள்ளனர். அத்துடன் ஜெருசலேம்தான் புனித நகரம் என்றும், அங்குள்ள சாலமன் கோயில்தான் புனிதத்தில் புனிதம் என்றும் நம்புகின்றனர். யூதர்கள்தான் உலகிலேயே புனிதமானவர்கள் என்றும், அவர்களிலும் லேவி என்னும் இனத்தவர்களே மிகுந்த புனிதமானவர்கள் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டுள்ளனர். அதிலும் பூசாரிகளாக இருப்பவர்களே உயர்ந்தவர்கள் எனவும், அவர்களுள் தலைமை பூசாரியே புனிதத்திலும் புனிதமானவர் என்றும் உறுதியாக நம்புகின்றனர்.

விடுமுறை நாட்களை ரொம்பவும் புனிதமான நாட்களாகக் கருதும் யூதர்கள், சபாத் என்னும் தங்களின் முக்கிய விடுமுறை நாள் தான் மிக புனிதமானது என்கின்றனர். உலகிலேயே தங்களின் தாய்மொழியான ஹீப்ரு தான் புனிதமான மொழி என்று சாதிக்கிறார்கள். தோரா தான் உலகின் புனிதமான நூல் என்று அடித்து சொல்லும் யூதர்கள், தங்கள் இறைத்தூதர் அருளிய பத்து கட்டளைகள் மிக புனிதமானது என்றும் கூறுகின்றனர். இப்படித் தங்களை தாங்களே புனிதமானவர்களாகவும், உயர்ந்தவர்களாகவும் சொல்லிக் கொள்ளும் யூதர்கள், பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு இனத்தவர்களால் அடித்துத் துரத்தப்பட்டார்கள். அவர்களின் சொந்த பூமியான இஸ்ரேலில் அவர்கள் நிம்மதியாகவே காலங்கழிக்க முடியாத நிலை ஏற்பட்டது தாய் மண்ணில் இருந்து வெளியேறி எங்கெங்கோ வாழ வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது.

எனினும் தங்கள் இனத்தின் மீதும் தங்கள் கடவுள் தூதரின் அருள்வாக்கின் மீதும் அபரிமிதமான நம்பிக்கையைக்கொண்ட யூதர்களுக்கு, இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தபோது இங்கிலாந்து புதுவாழ்வு அளித்தது. மீண்டும் இஸ்ரேல் நாடு அவர்கள் வசம் அளிக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டை அவர்களுக்கு வழங்கிய பாலஸ்தீனர்கள் பின்னர் நாடோடிகளாக மாற வேண்டிய சூழலை யூதர்கள் ஏற்படுத்திவிட்டனர். இப்போதும் யூதர்களால் இஸ்ரேலில் நிம்மதியான வாழ்வை வாழ முடியவில்லை என்பதே உண்மை.

யூதர்களுக்கும், கிறிஸ்துவர் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் பல வகையில் ஒற்றுமை இருக்கிறது. யூதர்களின் வேத நூலாக விளங்கும் தோரா, சிறிய மாறுபாடுகளுடன் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளிலும் பழைய ஏற்பாடாக இருந்து வருகிறது. மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனிலும் இதன் கதைகள் இடம்பெற்றுள்ளன. இம்மூன்று மதங்களும் ஆதாம்- ஏவாள் கடவுளால் உருவாக்கப்பட்ட முதல் மனித பிறவிகள் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளன. ஈராக் என்று இன்று அழைக்கப்படும் மெசபடோமியாவில் இருந்து புறப்பட்ட ஆபிரகாம், கானான் என்று அழைக்கப்பட்ட இன்றைய பாலஸ்தீனப் பகுதிக்கு சென்று வசிக்கத் தொடங்கியதை இம்மூன்று மதங்களுமே ஒப்புக் கொள்கின்றன.

மூன்று மதங்களின் புனித தலமாக இன்றும் விளங்கி வருகிறது ஜோர்டான் நாட்டிலுள்ள மெக்பெலா (Machpelahz)  என்னும் குகை, ஹெப்ரான் என்னும் இடத்தில் உள்ள இக்குகையில் தான் முதன் முதலாகத் தோன்றியதாக நம்பப்படும் ஆதாம், ஏவாள் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இதே குகையில்தான் சாராவும், பின்னர் ஆபிரகாமும் புதைக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. நோவா, ஆபிரகாம், மோசஸ் உள்ளிட்ட தீர்க்கதரிசிகள் உதித்து, கடைசியாகத் தோன்றிய தீர்க்கதரிசிதான் இயேசு கிறிஸ்து இயேசுவிற்கு முன்னர் தோன்றிய தீர்க்கதரிசிகள் யாரும் தனியாக மதம் எதனையும் நிறுவவில்லை.

எனவே, யூத மதம் மட்டுமே தனி ராஜ்யம் நடத்தி வந்தது. அன்றைய காலக்கட்டத்தில் கிரேக்க, ரோமானியர்களின் மத வழிபாடுகளும், அரேபியாவின் சிறு தெய்வ வழிபாடுகளும் இருந்த போதிலும் ஒழங்காக வடிவமைக்கப்பட்டு, ஒரே கடவுள் என்னும் உருவ வழிபாடற்ற மதமாக இருந்தது யூத மதம் மட்டுமே. யூதர்களின் புனித நூலான தோரா (Torah) எழுதப்பட்டது அவர்களின் தாய் மொழியான ஹீப்ரு மொழியில் தான் இம்மொழியை எபிரேயு என்கிறது பைபிள். இருப்பினும் இம்மொழி முக்கிய இடத்தை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் யூதர்கள் பெரும்பாலும் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் பேசப்பட்ட மொழிகளையே பயன்படுத்தி வந்தனர். எனவே, காலப் போக்கில் ஹீப்ரு மொழி இறந்துபட தொடங்கியது.

19ஆம்  நூற்றாண்டின் இறுதிகளில்தான் யூதர்கள் தங்கள் ஹீப்ரு மொழியை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். தங்களுக்கு என்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள ஒரு மொழி அவசியம் என்பதை உணர்ந்த பின்னரே ஹீப்ருவைத் தோண்டி எடுத்தார்கள். ஹீப்ரு மொழியை பள்ளிகளில் போதனா மொழியாக அறிவித்தார்கள். 1913ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் இம்மொழியின் தாக்கம் அதிகமாகியது. 1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதும், ஹீப்ருவை தேசிய மொழியாக அங்கீகரித்தார்கள்.

தற்போது யூதர்கள் வசிக்கும் இஸ்ரேலில் ஹீப்ரு மொழி ஆட்சி மொழியாக உள்ளது. பழைய கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கி இன்றும் பின்பற்றி வருகிறார்கள். விவசாயம், தொழில் நுட்பம், போர்த் தந்திரம் போன்றவற்றில் இன்று யூதர்கள் உலகிலேயே மிகச்சிறந்தவர்களாகத் திகழ்ந்து வருகிறார்கள். பல நூறு ஆண்டுகளாக யூதர்களை விரோதிகளாக நினைத்து, அந்த இனத்தையே அழித்து வந்த மேற்கத்திய நாடுகள் இன்று இஸ்ரேலின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டவர்களாக மாறியுள்ளனர்.

உலக மக்கள் தொகையில் யூதர்கள் 0.25 சதவீதம் என்ற அளவில் மிகச் சிறுபான்மையினராகத்தான் இப்போது உள்ளனர். அமெரிக்க மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் யூதர்கள். ஆனால் உலகின் மிகச்சிறந்த விருதாக விளங்கும் நோபல் பரிசைப் பெற்ற யூதர்கள் 27 சதவீதம் பேர். யூதர்களில் 42 சதவீதம் பேர் இஸ்ரேலில் வசிக்கின்றனர். மேலும் 42 சதவீதம் பேர் அமெரிக்காவிலும், மீதமுள்ளவர் ஐரோப்பா உள்ளிட்ட பிற நாடுகளிலும் வசிக்கின்றனர். செஸ் என்னும் அறிவுத்திறன் வாய்ந்த விளையாட்டில் உலகில் பாதிக்குப் பாதிப்பேர் யூதர்கள்தான்.

*இந்தியாவில் யூதர்கள்

இந்தியாவிலும் யூதர்கள் வசித்து வருகிறார்கள். மும்பை, புணே, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் வசிக்கும் இவர்கள் இஸ்ரேலின் மைந்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 2 ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முன்பு அலிபாக் என்னும் கடற்கரையில் ஏழு கப்பல்களில் இவர்கள் வந்திறங்கியதாகக் கூறப்படுகிறது. இவர்களின் வழக்கு மொழியாக மராத்தி இருக்கிறது. கேரளாவின் மலபார் பகுதிகளிலும் இவர்கள் வசித்து வருகிறார்கள். கொச்சின் யூதர்கள் என்னும் இவர்கள் பெரும்பாலும் கறுப்பு நிறத்தவர்களாக இருப்பதால் கறுப்பு யூதர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். மன்னர் சாலமோன் காலத்தில் இவர்கள் இங்கு வந்ததாக நம்பப்படுகிறது.

ஐரோப்பாவின் ஸ்பெயின், ஹாலந்து போன்ற நாடுகளில் இருந்து கோவாவிற்கு புலம்பெயர்ந்து வந்த இவர்கள் வெள்ளை யூதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். கொல்கத்தாவிலும் இவர்கள் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் வசித்து வரும் யூதர்களின் சமூகத்தில் பெண்கள் சார்ந்த சடங்குகள் விநோதமாக இருந்து வருகிறது.

*யூதப் பெண்கள்

மாதவிடாய் முடிந்த பின்னர் குளிப்பதற்காகப் பெண்களுக்குத் தனிக் குளியல் அறைகள் உள்ளன. மத சம்பிரதாயப்படி ஒரு தொட்டியில் மழை நீர் சேகரிக்கப்பட்டு யூத முறைப்படி குளியல் நடைபெறுகிறது. சம்பிரதாயப்படி அவர்கள் குளிப்பதை உறுதி செய்வதைக் கவனிப்பதற்காக தனியாக ஒரு பெண் நியமிக்கப்படும் முறையும் உண்டு. குளிப்பதற்கு முன்பு அழுக்குப்படிந்த நகங்கள் வெட்டப்படுகின்றன. அழுக்குப்படிந்த கேசங்களுகம் மழிக்கப்படுகின்றன. இதை மிக்விக் என்றும் டகாரா என்றும் கூறுகின்றனர். மிக்விக் என்றால் நீர் சேகரித்தல் என்றும், டகாரா என்றால் புனிதச் சடங்கு என்றும் பொருள்.

மாதவிடாய் காலங்களில் கணவனைத் தொடுவதோ ஒரே படுக்கையில் படுத்து உறங்குவதோ மறுக்கப்படுகிறது. நம் கிராமங்களில் இந்த வழக்கம் இன்றும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. பிரசவத்திற்கு பிறகு பெண் உடல் தீட்டாகக் கருதப்படுகிறது. புனித நீராட்டல் முடிந்தப் பிறகே அவள் தூய்மை அடைகிறாள். திருமணமான பெண்கள் மொட்டை அடித்துக் கொள்ளும் பழக்கம் ஆரம்ப காலத்தில் இருந்தது. பின்னர் 19 ஆம் நூற்றாண்டில் இது சற்று மாறி, தங்கள் தலைமுடியை மறைப்பதற்காக பொய் முடி (விக்) வைத்துக் கொண்டார்கள். அதாவது யூத குலப் பெண்கள் தங்கள் தலைமுடியை மற்றவர்கள் மட்டுமல்லாமல் தங்கள் கணவன் பார்ப்பதற்குக்கூட அனுமதிப்பது கிடையாது.

திருமணமான பெண்கள் ஒருவகையான தொப்பி, ஸ்கார்ப் போன்றவற்றால் தங்கள் தலையை மறைத்துக் கொள்ளும் பழக்கம் இன்றும் இருந்து வருகிறது. யூதர்கள் தங்கள் கோயிலில் பெட்டி ஒன்றை வைத்து கும்பிட்டனர். அதனுள் எகிப்தில் இருந்து வெளியேறும்போது  யூத மக்களுக்கு அவர்களின் கடவுள் யாவே அளித்த ஒப்பந்தம் கல்வெட்டாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது கோயிலின் மேற்குச் சுவர் மட்டுமே எஞ்சி இருப்பதால் அதையே யூதர்கள் வணங்கி வருகின்றனர்.  பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சில வரிகளை அக்கோயிலின் சுவர் புறமாக நின்று கொண்டு படிப்பதுதான் அவர்களின் தற்போதைய வழிபாட்டு முறையாக உள்ளது.

புரோட்டஸ்ண்ட் பிரிவினர் மதிக்கும் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டையே யூதர்கள் மதித்துப் போற்றி வருகின்றனர். இஸ்லாமியர்களின் ஒரே கடவுள் கொள்கையை அப்போதே யூதர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். தொழுகை செய்வதிலும் இஸ்லாமியர்கள் யூதர்களை ஒத்தே இருக்கின்றனர். கீழே அமர்ந்து நமஸ்கரிக்கிறார்கள். அஸ்லாம் அலைக்கும் என்பது இஸ்லாமியர்களின் வாழ்த்து மொழி. அதை ஹீப்ருவில் மொழி பெயர்த்தால் சாலோம் அலைக்கும் என்று வருகிறது. இப்போதும் யூதர்கள் சாலோம் அலைக்கும் என்றே ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது கூறிக் கொள்கிறார்கள்.

*(தொடரும்)*


மத அரசியல் - அத்தியாயம் (04)

_____________________________
எழுத்து : C.P.சரவணன் 
பகிர்வு :
_____________________________ 

*கிறிஸ்தவம் (Christianity)*

தாவிதின் மரபில் பிறக்கும் மீட்பர் ஒருவரால் இறைவனின்  மீட்புத்திட்டம் செயல்படும் என்று கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, அதாவது கி.மு.8-ஆம் நூற்றாண்டில் யூதர்களின் தீர்க்கதரிசிகளான ஆமோஸ்,  இசையாஸ் போன்றோர் மக்களுக்கு அறிவித்தனர். அவ்வாறான மீட்பர் ‘மேசியா”    (messiah) என்றும் அவர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.
அன்றைய காலக்கட்டத்தில் இருந்த இறைவாக்கினர்களில் அருளப்பர் மட்டும் வித்தியாசமானவராக இருந்தார். பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளை இணைத்து கிருஸ்துவத்திற்கு நல்ல அடித்தளம் அமைத்தார். பழைய ஏற்பாடு என்பது இறைவனை மையப்படுத்தி அமைந்தது.  புதிய ஏற்பாடு மனிதனை மையப்படுத்தி உருவானது. அருளப்பர் காலம் வரை பழைய ஏற்பாடு என்றும்,  அதன் பின்னர் புதிய ஏற்பாடு என்றும் கருதப்படுகிறது.

இயேசு கிருஸ்துவின் வருகையை மக்களுக்கு அறிவித்தவர் என்னும் பெருமை அருளப்பரையே சாரும். இயேசு பிரானுக்கு தண்ணீரால் திருமுழுக்கு அளித்தவரும் இவரே.  இதனால் இவர் “ஸ்தாபகர்” என்றும், ‘திருமுழுக்கு அருளப்பர்” என்றும் மக்களால் அழைக்கப்பட்டார். அருளப்பரின் நடவடிக்கைகளைப் பார்க்க மக்கள் தீர்க்கதரிசிகள் அறிவித்த ‘மெசியா’இவர்தான்  என்று நம்பத் தொடங்கினர். ஆனால் அருளப்பர் தன்னடக்கத்துடன் இதனைத் திட்டவட்டமாக மறுத்தார். ‘மேசியாவாக இருக்கும் தகுதி எனக்குச் சிறிதும் கிடையாது. அதற்கு தகுதியான ஒருவர் மிக விரைவில் பிறப்பார் என ஆரூடம் கூறினார்.

தாவீதின் மன்னர் குடும்பத்தில்தான் மேசியா என்னும் மீட்பர் பிறப்பார் என்றே எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தனர்.  இதனால் அங்கிருந்த பெண்கள் அனைவரும் தங்கள் வயிற்றில் மெசியா பிறக்க வேண்டும் என்று தீவிர பிரார்த்தனை செய்தனர். ஆனால் இறை சித்தம் வேறாக அமைந்துவிட்டது. மன்னர் குடும்பத்தைச் சாராத பெண்மணியான மரியாள் வயிற்றில் சிசு உருவானது.

உலகின் முதல் பெண் ஏவாள், ஆதாமுடன் இணையக் கூடாது என்பது கடவுளின் கட்டளை.  ஆனால் அதனை உறுதியாகப் பின்பற்றாமல் தவறு செய்தாள். ஆனால் உலகின் இரண்டாவது பெண்மணியான மரியாள், கடவுளின் கட்டளைக்கு அடிபணிந்தாள்.  ஆகவே கடவுளின் ஆவி மரியாள் மீது படர்ந்து,  அவள் வயிற்றில் கருவைச் சுமக்கச் செய்தது.  சிசு உருவானது.
இந்த உண்மையை அறியாத மரியாளின் கணவர் சூசை மனம் வருந்தினார். இதனைப் புரிந்து கொண்ட இறைவன், வான தூதர்களை அனுப்பி உண்மையை சூசைக்கு விளக்கச் செய்தார். அதன்பிறகே அவரும் சித்தம் தெளிந்தார். சூசையும், மரியாளும் ரோமானியப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட பெத்லகேம் நகருக்கு இடம்பெயர்ந்தனர்.  அங்கு அவர்கள் தங்குவதற்குச் சரியான இடம்பெயர்ந்தனர். அங்கு அவர்கள் தங்குவதற்குச் சரியான இடம் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி மாடுகள் கட்டப்படும் தொழுவத்தில் தங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அங்கு தான் மெசியா பிறந்தார். அங்கு தான் இயேசு நாதர் அவதரித்தார். அங்கு தான் தேவதூதனை மரியாள் பெற்றெடுத்தாள். குழந்தை வளர்ந்தது. அவர் தான் மேசியா என்பது கி.பி. 2ஆம் நூற்றாண்டில் அறிவிக்கப்பட்டது. “ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஜானஸ்நானம் பெற்று, ஜபம் பண்ணூகையில் வானம் திறக்கப்பட்டது” பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல் அவர் மீது இறங்கினார்.-லூக்கா 3:21-23; யோவான் 1:32-34 தனது பன்னிரெண்டாவது வயதில் ஜெருசலேமில் போதர்கள் நடுவே அமர்ந்து அவர்களுக்குச் சரிசமமாக இயேசு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். தன் 30-வது வயதில், இறைப் பணியைச் செய்யப் போவதாக இயேசு அறிவித்தார். மனம் திரும்புதலுக்கு அடையாளமாக யோர்தான் (Jordan River) நதிக்கரையில் யூதர்களுக்கு யோவனிடம் முதலில் சென்றார். அருளப்பர் அவருக்கு திருமுழுக்கு என்னும் ஞானஸ்நானம் செய்து வைத்தார்.  அப்போது கடவுள் புறா வடிவில் வந்து அவர் மீது அமர்ந்தார்.  இதன் பின்னர் நாற்பது நாட்கள் உண்ணா நோன்பிருந்தார் இயேசுபிரான். 

இந்நிலையில்தான் சாத்தான் விழித்துக் கொண்டது ஊழியம் செய்வதற்காகப் புறப்பட்டிருக்கும் இயேசுவை சந்தேகப் பார்வையால் பார்த்தது. யார் இந்தப் புதியவன்?  உலகிற்குக் கெடுதலைச் செய்து கொண்டும் உலக மக்களை நசுப்பித்துக் கொண்டும் இருக்கும் நிலையில், அவர்களைக் காப்பாற்றி நல்வழிப்படுத்துவதற்காகக் கிளம்பி இருக்கும் இப்புதிய மனிதன் யார்? ஏன்று குழப்பத்துடன் இயேசுவை சாத்தான் அணுகியது.

இறைச் சேவையைச் செய்யவிடாமல் தனது வழிக்கு அவரைத் திருப்பிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டியது.  அதற்காக சில தந்திரங்களைப் பிரயோகித்துப் பார்த்தது.  சுவையான உணவு,  உலக சுகபோகங்கள், பெரும் புகழ் போன்றவற்றைக் காட்டி அவரை மயக்க முயற்சி மேற்கொண்டது. ஆனால் விடுதலைப் பணியில் மட்டுமே நாட்டமுள்ள இயேசு,  இத்தகைய கீழ்த்தரமான மயக்கங்களுக்குத் தன்னை விலை போக மறுத்துவிட்டார். சிறைப்பட்டோரை விடுவித்தார். பார்வையற்றோர்களுக்கு பார்வையை வழங்கினார்.  அடிமைத்தனத்தை உடைத்தார். ஒடுக்கப்பட்டோருக்கு உரிமைகளை அளித்தார். இவ்வாறாக அவரது விடுதலைப் பணி வேகமாக வளர்ந்தது. இதன் பின்னர் இவரது சீடரானார் அருளப்பர்.

பழம் பெருமை பேசித் திரிதல்,  முட்டாள்தனமான பாரம்பரிய பழக்க வழக்கங்கள் போன்றவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தார் இயேசு பிரான். அநீதிகளைப் பார்த்தும் பாராமுகமாக இல்லாமல் அதனைப் பகிரங்கமாகவே கண்டித்தார். பெரிய மனிதன் என்னும் போர்வையைப் போர்த்திக் கொண்டு சிறுமைகளைச் செய்யும் கயவர்களின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டினார்.    இவ்வாறு தவறுகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடிய இயேசு,  மக்கள் பால் மிகுந்த அன்பு செலுத்தினார்.  அவர்களைப் பரிவுடன் நடத்தினார்.  அவர்களிடம் பாசத்தைக் கொட்டினார்.

இயேசு கிறிஸ்துவிடம் மக்களுக்கு ஏற்பட்ட நோய் நொடிகளைக் குணப்படுத்தும் சக்தி இருந்தது. இயற்கையை வெல்லும் அற்புத சக்தி அவரிடம் நிறைந்து காணப்பட்டது.  மரணத்தை வெல்லும் சக்தி இருந்தது. இவற்றுக்கெல்லாம் கொடுமைகளை இழைத்து வந்த சாத்தானை வெல்லும் சக்தி அவரிடம் இருந்தது. இயேசு ஒரு சமூகப் புரட்சியாளராகச் செயல்பட்டார். எதையும் வீராவேசமாகப் பேசி, மற்றவர்களைக் கவர்ந்துவிட்டு, அப்புறம் எங்கோ காணாமல் போய்விடும். சாதாரண மனிதனாக அவர் இருக்கவில்லை. எதைச் சொன்னாரோ அதைச் செயலிலும் காட்டினார்.

இவரது இத்தகைய பண்பும், உழைப்பும், உண்மையும் நேர்மையும் ஏராளான மக்களின் அன்பைப் பெறுவதற்கு உதவின.  அவரைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே இருந்தது. இவ்வாறு ஏராளமான விசுவாசிகளை அவர் ஈர்த்து வந்த நிலையில்,  யூதர்கள் மட்டும் இவரை ‘மேசியா”என்று நம்பத் தயாராகவே இல்லை.

மன்னர் குலத்தில்தான் மேசியா பிறப்பார் என்றும் சாதாரண குடும்பத்தில், அதிலும் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவர் நிச்சயமாக மேசியாவாக இருக்க முடியாது என்றும் அவர்கள் உறுதியாகக் கூறினார்கள். இதனால் இயேசுவை அவர்கள் இறைத் தூதராக ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அப்போது ரோமானியர்களின் ஆட்சி அங்கு நடைபெற்று வந்தது.  யூதர்களை அவர்கள் அடக்கி ஒடுக்கி வந்தபோதிலும்,  இயேசுவைப் பற்றித் தவறான எண்ணத்தை ரோமானிய அதிகார வர்க்கத்திடம் யூதர்கள் தெரிவித்து வந்தனர்.  அதனை நஞ்சு என்று அறியாமல் ரோமானியர்களும் முழுமையாக நம்பினர்.

“இயேசு தேசத்திற்கு துரோகம் இழைப்பவராக நடந்து வருகிறார். மதத்திற்கு தீங்கிழைப்பவராக அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அவர் ராஜதுரோக நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார். எனவே இயேசுவிற்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். இதுதான் யூதர்களின் எண்ணமாக இருந்தது. இதனை ரோமானியப் பேரரசும் நம்பி ஏற்றுக் கொண்டது. இயேசு கைது செய்யப்பட்டார். துன்புறுத்தப்பட்டார். சித்ரவதை செய்யப்பட்டார். கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

கடைசியில் சிலுவையில் அறையப்பட்டார் இயேசுபிரான். மரணம் அவருடன் கைகுலுக்கியது. இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவையின் எடை 150 கிலோ இதன் நீளம் 15 அடி அகலம் 8 அடி. தன் மரணத்தால் உலக மீட்புக்கு விடுதலை அளித்தார் இயேசுநாதர். ஆனால் மரணிப்பதற்கு முன்பு தனது சீடர்களிடம், மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதாக உறுதிபடக் கூறினார். அதேபோல மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். தனது சீடர்களுக்குக் காட்சி அளித்தார்.  அத்துடன் நாற்பது நாட்கள் இந்த உலகில் அவர் உயிர் வாழ்ந்தார்.

அப்போது தன் கூடவே இருந்து பயிற்சி பெற்றவர்களை ”அப்போஸ்தலர்”களாக நியமித்தார்.  மேலும் தான் நிறுவும் திருச்சபையின் தலைமைப் பொறுப்பினை அவரது சீடர்களில் ஒருவரான ராயப்பருக்கு வழங்கினார். அத்துடன் இவ்வுலகம் உள்ளவரை திருச்சபையும் கூடவே இருப்பதாகவும் வாக்களித்த இயேசுபிரான் விண்ணுலகை அடைந்தார்.

அவர் மரித்த பின்னர் அவரது சீடர்கள் அச்சத்துடன் இருந்தனர். அவர்கள் உயிருக்கும் ஆபத்து நேரிடும் என்பதை உணர்ந்து அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். ஜெருசலேமில் நடந்த பண்டிகைக்காக மக்கள் பெருமளவில் திரண்டபோது சீடர்கள் மக்களோடு  மக்களாகக் கலந்து அங்கே சென்றனர்.

ராயப்பர் மட்டும் துணிச்சலுடன் இயேசுவின் நற்செய்தியை அறிவித்தார். இதனால் மகிழ்ந்துபோய் 3 ஆயிரம் பேர் திருச்சபையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.  திருமுழுக்கு பெற்றனர். கத்தோலிக்க திருச்சபை தோன்றியது. துணிச்சல் அடைந்த சீடர்கள் இயேசுவின் கட்டளைப்படி திசைக் கொருவராகப் பயணித்து, பல்வேறு நாடுகளுக்கும் சென்று மக்களை திருச்சபையில் இணைத்தனர். ரோமைத் தலைமைப் பீடமாகக் கொண்டு திருச்சபை நிறுவப்பட்டது. இதனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபை என்ற பெயரும் இதற்கு சூட்டப்பட்டது.

இயேசுவின் போதனையை அடிப்படையாய் கொண்டு இயேசுவே கிறிஸ்து என்று வெளிப்படையாக அறிக்கை செய்வதே கிறிஸ்தவம் அல்லது கிறிஸ்தவன் என்கிறது வெப்ஸ்டர் என்னும் வேத விளக்கவுரை இயேசு கிறிஸ்துவை பின்பற்றினவர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் அந்தியோகியாவில் வழங்கப்பட்டது.

இயேசுவை,  மெசியா’என்றும் ‘கிறிஸ்து’என்றும் அழைத்தனர்.  இதன் பொருள் ‘திருப்பொழிவு பெற்றவர்’ என்பதாகும். மேசியா என்னும் சொல் எபிரேய மொழியில் இருந்தும்  கிறிஸ்து என்னும் சொல் கிரேக்க மொழியில் இருந்தும் பிறந்தன. கத்தோலிக்கம் என்பது  திருவழிபாடு,  இறையியல்,  அறநெறிக் கொள்கைகள் போன்றவற்றிற்காகப் பயன்படுத்தப்படும் சொல் என்றாலும் குறிப்பாக அது கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவத்தைக் குறிப்பிடுவதற்காகவே பயன்படுகிறது. முதலாம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்தவ சபைகளைக் குறிப்பதற்காக இச்சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

*பைபிளை எழுதியது யார்?*

பைபிளில் பழைய ஏற்பாடு என்று பலரால் அழைக்கப்படும் எபிரேய வேதாகமத்தின் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாடு என்றழைக்கப்படும் கிறிஸ்துவ வேதாகமத்தின் 27 புத்தகங்களும் இருக்கின்றன. ஆகவே 1600 ஆண்டுகாலப் பகுதியில் சுமார் 40 பேர்களால் எழுதப்பட்ட 66 புத்தகங்களின் தொகுப்பே பைபிள் என்பர். இவற்றில் சில அப்போஸ்தலர்கள், வரிவசூலிப்பவர்களாக இருந்த மத்தேயூ, மீன்பிடிப்பவராக இருந்த யோவான் வைத்தியனாக இருந்த லூக்காவும் எழுதியுள்ளனர். பைபிள் இவாறு சொல்கிறது “ஆக, வேத வாக்கியங்கள் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் செயல் நடப்பிக்கும் சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்டது. 2 தீமோத்தேயு 3:16,17. கத்தோலிக்க பைபிளில் உள்ள தள்ளுபடியாகமம் என்ற கூடுதலான பகுதிகளை யூதர்களும், புரோட்டஸ்டண்டினரும் ஏற்றுக்கொள்வதில்லை.

*கத்தோலிக்க மதம்*

கத்தோலிக்க மதம் எப்போது தோன்றியது. இதன் ஆரம்பாகல வரலாற்றைப் புரட்டினால் நான்காம் நூற்றாண்டில்தான் இது தோன்றியதாக வரலாற்றுச் சான்றாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அன்றைய  காலக்கட்டத்தில் ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்தவர் கொன்ஸ்டன்டைன்.  இயேசுவின் மீது அப்போது அவருக்கு பற்று ஏதும் கிடையாது. ஆனாலும் ஏனைய ரோமாபுரி வேந்தர்களைப் போலவே அவரும் பல்வேறு நாடுகளுடன் போர் தொடுத்துக் கொண்டு தான் இருந்தார்.

இந்நிலையில் ஒரு முக்கியமான போரில் அவர் ஈடுபட இருந்தார்.  அதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடி வேறு அவருக்கு இருந்தது. போர் தொடங்குவதற்கு முன்பாக இரவில் கனவு ஒன்று அவருக்கு வந்தது. சிலுவை குறி பொறிக்கப்பட்ட கவசத் தொப்பியை அணிந்து கொண்டு போர் புரிந்தார். கனவு என்று அதனைக் கழற்றிவிடாமல்,  அப்படியே சிலுவைக் குறி பொறிக்கப்பட்ட கவசத் தொப்பினை அணிந்து கொண்டு போர் புரிந்தார்.

ஆச்சர்யப்படும் வகையில் அந்தப் போரில் மகத்தான வெற்றி கொன்ஸ்டன்டைனுக்குக் கிடைத்தது. நிச்சயமாக இக்கனவுதான் வெற்றியைப் பெற்றுத் தந்ததாக அவர் உறுதியாக நம்பினார்.  இச்சிலுவை அடையாளம் கிறிஸ்தவ மதத்தோடு சம்பந்தப்பட்டது என்பதை அறிந்தார்.  கிறிஸ்தவர்கள் வணங்கும் இயேசு கிறிஸ்துதான் தனது வெற்றிக்குக் காரணமானாவர் என்ற நம்பிக்கையும்  அழுத்தமாகப் பதிந்தது.

இதற்கு விசுவாசமாக ஏதாவது செய்ய வேண்டும்  என்று விரும்பினார். தனது சாம்ராஜ்யத்தின் மதமாக கிறிஸ்தவம் விளங்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். அதுமுதல் கிறிஸ்தவம் அதிகாரப்பூர்வமான மதமாக மாறியது அவரது சாம்ராஸ்யத்தின் தலைநகர் ரோம் அதன் தலைமை இடமாகவும் அமைந்தது.

*கத்தோலிக்க திருச்சபை*

இயேசுவின் பன்னிரு சீடர்களில் தலைமைப் பதவியைப் பெற்றவர் ராயப்பர். இவரது இயற்பெயர்  சீமோன்.  இவரை பேதுரு என்று இயேசு அழைத்தார் இதன் தமிழ்  வடிவம் ராயப்பர்.  பேதுரு என்றால்  பாரை என்று பொருள்.

*திருத்தூதர் பேதுரு*

பேதுரு என்னும் பாறை மீது தமது ஒரே திருச்சபையை இயேசு கிறிஸ்து நிறுவினார் ஒருமை, புனிதம், கத்தோலிக்கம் என்னும் பொதுமை, திருத்தூதுத்துவம் ஆகியவற்றை இச்சபை அடிப்படையாகக் கொண்டது.

மீட்புப் பணி இத்திருச்சபையின் வழியாக மனித வரவாற்றில் தொடர்ந்து நிலைபெறுகிறது. இதுபலநிலைகளைக் கொண்டது அதிகார அமைப்பு மற்றும் ஆன்மீக சமூகமாக இச்சபை விளங்குகிறது.

இத்திருச்சபையின் தலைவர் பாப்பரசர் என்றும், போப் ஆண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார்,  இதன் முதல் பாப்பரசர் ராயப்பர். இவரைத் தொடர்ந்து இந்தப் பதவியைப் பெற்றவர்கள் பலபேர்.

அப்போஸ்தலர் என்பவர்கள் பின்னர் ‘ஆயர்”என்று அழைக்கப்பட்டனர். இப்போதும் அப்படித்தான் அழைக்கப்பபட்டு வருகின்றனர். திருச்சபையானது மறை மாவட்டங்கள்,  பங்குகள் போன்றவை அடங்கிய ஒரு சபையாக விளங்குகிறது. மறை மாவட்டத்தின் பொறுப்பாளர் ‘ஆயர்’ என்று அழைக்கப்படுகிறார். பங்குவின் பொறுப்பாளர் ‘பங்குத் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். ஆயர்களின் தலைவர்தான் ‘பாப்பரசர்’ ஆவார். இது தான் திருச்சபையின் நிர்வாக அமைப்பாக உள்ளது.

பேதுருவின் வாரிசு என்ற முறையிலும்,  இறை மக்கள் அனைவரின் ஆசிரியர் என்ற வகையிலும்,  திருத்தந்தை தவறா வரம் பெற்றவராக விளங்குகிறார். அவரோடு ஒன்றிணைந்து செயல்படும் ஆயர்களுக்கும் இந்த வரம் உண்டு. திருப்பணியாளர்கள். துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் ஆயர்களின் பணியில் ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.

அனைத்திற்கும் மேலாக இறைவனை நேசித்து, அவருக்கு ஆராதனை செலுத்தி வருகிறது திருச்சபை, நமது பாவ மன்னிப்புக்காக இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் செலுத்திய பலியை நாள்தோறும் புதுப்பித்து அவருக்கு நன்றி கூறுகிறது இறைவனின் மகிமைக்காகவும், மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் இப்பலியைப் புதுப்பித்து ஆராதனை செலுத்துகிறது.

திருச்சபை கிறிஸ்துவின் வாழ்வை மையமாகக் கொண்டு,  திருவழிபாட்டு ஆண்டையும் ஒழுங்கு முறைகளையும் அமைத்துள்ளது. இயேசு திறிஸ்துவின் வருகைக்குத் தயார் செய்ய திரு வருகை காலம், அவரது பிறப்பைக் கொண்டாட கிறிஸ்து பிறப்பு விழாக்காலம் உள்ளிட்டவைகளை திருச்சபை அமைத்துத் தந்துள்ளது.

திருப்பலி,  நற்கருணை வழிபாடு ஆகியவை கிறிஸ்தவ வாழ்வின் மையாக அமைந்துள்ளது. செபமாலை, சிலுவைப் பாதை ஆகிய பக்தி முயற்சிகள் இறைவனின் உறவில் வளர உதவுகின்றன. கத்தோலிக்க திருச்சபை,  மூன்று விதமான புனிதர்களை இவ்வுலகிற்கு அடையாளம் காட்டுகிறது. விண்ணகத்தில் வாழும் புனிதர்கள், உத்தரிப்பிடத்தில் தூய்மை பெறும் ஆன்மாக்கள் மற்றும் மண்ணுலகில் வாழ்பவர்கள் ஆகிய இவர்களிடையே நிலவும் உறவே, புனிதர்களின் சமூக உறவு என்று அழைக்கப்படுகிறது.

புனிதர்களிடம் வேண்டுதல் செயவதும், அவர்களுக்கு வணக்கம் செலுத்துவதும் இறைவனின் உதவியைப் பெற தகுந்த வழிகள் ஆகும். கத்தோலிக்க திருச்சபை,  இறைவனின் தாயான கன்னி மரியாவுக்கு மேலான வணக்கத்தையும,  மற்றும்
புனிதர்களுக்கு வணக்கத்தையும் செலுத்துகிறது. கடவுளின் கட்டளைகளுக்கு எதிராகவும், மனிதர்களுக்குத் துன்பம் ஏற்படுத்தும் வகையிலும் செய்யப்படும் செயல்களே பாவம் எனப்படுகிறது. பிறப்பு வழிப் பாவம் திருமுழுக்கின் வழியாகவும்,  செயல் வழிப் பாவம் ஒப்பரவு அருள் அடையாளம் முலமாகவும் போக்கப்படுகிறது.

என்னைப் பின்பற்ற விரும்புபவன், சிலுவையைத் தன் தோள் மீது சுமந்து கொண்டு என்னைப் பின்பற்றட்டும் என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வு என்பது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. கிறிஸ்துவ சாவில் இருந்து உயிர்ப்பு வாழ்வுக்கு கடந்து சென்றது போல,  பாவ வாழ்வில் இருந்து புனித வாழ்வுக்கு கடந்து செல்வதே ஒவ்வோரு கிறிஸ்தவனுக்கும் விடுக்கப்படும் அழைப்பு ஆகும்.

கத்தோலிக்கத் திருச்சபையில் குழப்பங்கள் ஏற்பட்ட காலமும் உண்டு. கொள்கை முரண்பாடு,  சுயநலம்,  நிர்வாகத் தவறு போன்றவை  காரணமாக மத்திய காலத்தில் திருச்சபையில் குழப்பம் ஏற்பட்டது.  முதல் புரட்சிக்குரல் மார்ட்டின் லூதர் கிங்,  கல்வின் போன்றவர்களின் மூலமாக வெளிப்பட்டது. இவர்கள் திருச்சபையில் புரட்சிவாதிகளாகக் கருதப்பட்டனர்,  தகராறு முற்றிவிடாமல் இருப்பதற்காகவும், பிளவு ஏதேனும் ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்காகவும் திருச்சபையினருக்கும்,  புரட்சி வாதிகளுக்கும் இடையே சமரசம் செய்து  வைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. எனினும் இந்த முயற்சி தோல்வியையே தழுவியது. பிளவு ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. திருச்சபை பிரிந்தது.  வேறு பல திருச்சபைகள் உருவாகின.

கத்தோலிக்க  திருச்சபையினரோ விரிசல் அதிகமாகி விடாமல் தடுப்பதற்காக பாப்பரசர் தலைமையில் உடனடியாகக் கூடி விவாதித்தனர். சட்டம், வழிபாட்டு முறை போன்றவைகளைப் பற்றி விரிவாக விவாதித்தனர். அதில் காணப்படும் தவறுகளைத் திருத்தவும் செய்தனர். 1962 மற்றும் 1963ஆம் ஆண்டுகளில் கூடிய இரண்டாம் திருச்சபை கூட்டத்தில் புதிய மறுமலர்ச்சி எட்டப்பட்டது. கத்தோலிக்கத் திருச்சபை காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களைப் பெற்றது. தற்போது கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக திருச்சபையின் தலைமையகத்தில் செயலகம் ஒன்று பணியாற்றி வருகிறது. கத்தோலிக்க மதம் கிறிஸ்து இறை மக்களைக் கொண்டதாகத் தற்போது காட்சியளிக்கிறது.

*கத்தோலிக்கத்தின் கருத்துகள் :*

o இயேசுவுக்கு கடவுள், மனிதன் என்னும் இரு இயல்பு நிலைகள் உள்ளன.
o பரிசுத்த ஆவியானவர் பிதா மற்றும் சுதனில் இருந்து தோற்றம் பெற்றவர்.
o கன்னிமரியாள் ஆதிபாவத்தில் இருந்து நீங்கியவளாகப் பிறந்தாள்.
o கன்னிமரியாளுக்கு இயேசுவின் பலியில் பங்கிருக்கிறது அவள் மூலமாகவே  அனைத்து அருட்கொடைகளும் வழங்கப்படுகின்றன. மரியாள் பாவங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டவள்.
o ரோம் நகரே உலகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களின் தலைமையகம்,  பாப்பரசர் தவறுகள், பாவங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டவர்.
o இயேசுவின் இரத்தத்தில் இருந்து யூதர்கள் குற்றமற்றவர்கள் என்னும் அறிவிப்பு 1965ஆம் ஆண்டு வாடிகனில் நடைபெற்ற கத்தோலிக்கர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

*மாநாடுகள்

இயேசு மரித்த பிறகு கிறிஸ்தவர்களிடையே மத ரீதியாக கருத்து முரண்கள் தோன்றின. அப்படி கருத்து முரண்பாடுகள் தோன்றிய போதெல்லாம் உயர்நிலைப் பாதிரியார்கள் ஒன்றுகூடி விவாதித்து,  கருத்துக் கணிப்புகள் நடத்தி புதிய தீர்மானத்தை மேற்கொண்டனர்.

இப்படி விவாதித்து முடிவெடுப்பதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு,  அதன் காரணமாகப் பிளவுபட்டு,  புதிய மதப் பிரிவுகள் உருவாகின. முதன் முதலாக பிராந்திய அளவில் ஜெருசலேம் நகரில் மாநாடு ஒன்று கூட்டப்பட்டது.  அதில் யூதர்கள் அல்லாதோர் விருத்த சேதனம் செய்ய வேண்டுமா? ஏன்பது குறித்து காரசார விவாதம் நடந்து முடிவெடுக்கப்பட்டது.

பின்னர் கி.பி. 325ஆம் ஆண்டு,  இயேசுவின் கடவுள் தன்மை குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைக் களைவதற்கான மாநாடு ஒன்று நடைபெற்றது.  அதில்,  இயேசு கிறிஸ்துவின் இறைத் தன்மை ஒப்புக்கொள்ளப்பட்டது.

பரிசுத்த ஆவி என்பது தேவதூதர்கள் போல் படைக்கப்பட்டது.  என்பது குறித்து கருத்து மோதல்களைத் தொடர்ந்து கி.பி.381ஆம் ஆண்டு மற்றொரு மாநாடு கூட்டப்பட்டது. மாநாட்டில் இயேசு பிரிக்க முடியாத கடவுள் இயல்பு மற்றும் மனித இயல்புகளைக் கொண்டிருப்பவர் என்று தீர்மானிக்கப்பட்டது.

கன்னி மரியாள் கடவுளைப் பெற்றெடுத்த காரணத்தால் அவர் கடவுளின் தாய் என்று அழைக்கப்படுவாள் என்றும் முடிவு செய்யப்பட்டது. இயேசுவின் கடவுள் தன்மை மனிதத் தன்மையுடன் கலந்து விட்டது என்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை நீக்குவதற்காக கி.பி.449 ஆம் ஆண்டு மாநாடு ஒன்று கூடியது.

அதில், இயேசுவின் கடவுள் தன்மை அவரது மனிதத் தன்மையுடன் கலப்போ, மாற்றமோ இல்லாமல் ஒன்றிணைந்து விட்டது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பாப்பரசர் இதனை  ஏற்றுக்கொள்ளவில்லை என்தால், உடனே கல்கீதூனியா மாநாடு என்று இன்னொன்று கூட்டப்பட்டு,  இயேசுவின் கடவுள் தன்மையும் மனிதத் தன்மையும் ஒன்றிணையவில்லை என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மேலும் முந்தைய மாநாட்டு தீர்மானம் ரத்தும் செய்யப்பட்டது.

இது சிலருக்குப் பிடிக்கவில்லை.  கருத்து மோதல்கள் அதிகரித்து,  முடிவில் கிறிஸ்தவர்கள் இருபெரும் பிரிவாகப் பிரிந்தனர். இயேசுவிற்கு கடவுள் பண்புகள் மனிதப் பண்புகளுடன் எவ்வித மாற்றமும் இன்றி ஒன்றிணைந்துவிட்டதாக நம்பியவர்கள் ஆர்த்தோடெக்ஸ் பிரிவு என்று அழைக்கப்பட்டனர்.  இப்பிரிவு இன்று வரை அப்படியே இருந்து வருகிறது. அதில் எவ்விதப் பிளவும்   ஏற்படவே இல்லை.

இயேசுவிற்கு கடவுள், மனிதன் என்னும் இரு இயல்புகளும் இருப்பதாக  நம்பியவர்கள் கத்தோலிக்க பிரிவு என்றாகினர். கி.பி. 680ஆம் ஆண்டு பிரிந்து சென்றவர்கள் யோவான் மாறோன் என்பவர் தலைமையில் ஒன்றுகூடி கடவுள், மனிதன் ஆகிய இரு இயல்புகளும் ஒன்றிணைந்துவிட்டது என்று தீர்மானித்தார்கள். மாறோனியர்கள் என்று தனியாக இனங்காட்டப்பட்ட இப்பிரிவினர் கத்தோலிக்கர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இவர்கள் பயந்துபோய் லெபனான் மலைப்பகுதியில் தஞ்சம் அடைந்தனர்.

ஆனால் கி.பி. 1182ஆம் ஆண்டு தங்கள் பிரிவின் தனித்துவத்தைப் பேணிக் காப்பதுடன், ரோமாபுரியைத் தலைமை இடமாகக் கொண்டு விளங்கும் கத்தோலிக்க திருச்சபைக்கு விசுவாசமாக இருப்பதாகவும் அறிவித்தனர். கி.பி 879ஆம் ஆண்டு மற்றொரு கூட்டம் நடைபெற்றது ரோம் தேவாலயத்தினருக்கு மாற்றாக பரிசுத்த ஆவியானது பிதாவிடம் இருந்து மாத்திரம் தோற்றம் பெற்றது என்று தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் 15ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக மார்ட்டின் லூதர் என்பவரால் புரட்டஸ்டன்ட் என்னும் புதிய பிரிவு உருவானது. இன்று வரை கத்தோலிக்கப் பிரிவுக்கு எதிராக சமபலத்துடன் அது விளங்கி வருகிறது.

*(தொடரும்)*

மத அரசியல் - அத்தியாயம் (05)

______________________________
எழுத்து : C.P.சரவணன்  
பகிர்வு : 
______________________________


*கிறிஸ்தவம் - புரோட்டஸ்டன்ட்*

ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் அக்காலத்து மன்னர்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர பெரு முயற்சி செய்து வந்தது.  இது ஒரு சாராருக்குக் கவலையை அளித்தது. இதனால் அரசியல் அதிகாரமும் மத அதிகாரமும் ஒன்றுக் கொன்று போட்டியிட ஆரம்பித்தன. பாப்பரசரின் அதிகாரம் இதன் காரணமாகப் பலவீனம் அடைந்தது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் எதிர்ப்பாளர்கள் தங்கள் கருத்தை எதிர்ப்பாகக் கூறுவதைப் போல அறிவிக்காமல், ஆணையாகவே அறிவித்தார்கள். 1529ஆம் ஆண்டு ஸ்பியேர் பேரரசு மன்றம் கூடியது. இதில் எதிர்ப்பாளர்களாக இருந்த ஜெர்மன் கிறிஸ்தவத் தலைவைர்கள் மற்றும் கத்தோலிக்கத் திருச்சபையினர் இடையே சமரச உடன்பாடு செய்து கொள்ளவதற்காகவே இச்சபை கூடியது.

இம்மன்றத்தில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் கத்தோலிக்க ஆயர்கள். ஆனாலும் ஜெர்மன் கிறிஸ்தவர்கள் தங்கள் நிலையில் இருந்து சிறிதளவும் மாறவே இல்லை. பிடிவாதமாக இருந்தார்கள். தங்கள் எண்ணத்தையும், நிலைப்பாட்டையும் தைரியமாகவும் கட்டளையிடுவதைப் போலவும் தெரிவித்தார்கள். 

அவர்களின்  தொனி ஆணையிடுவதைப் போன்று இருந்த காரணத்தால்தான் அவர்களுக்கு புரோடஸ்டன்ட் என்ற பெயர் ஏற்பட்டது. Protest என்றால் எதிர்ப்பு என்று அர்த்தம். அதுபோன்று Protestation என்றால் எதிர்ப்பை தெரிவித்தல் என்பதாகும். இயேசு மரித்த பிறகு கிறிஸ்தவம் ஐந்து புனித தலங்களை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தது. ரோமாபுரி, ஜெருசலேம், அந்தியோக்கியா, அலெக்ஸான்ட்ரியா, காண்ஸ்டாண்டிநோபிள் ஆகியவைதான் அப்புனிதத் தலங்கள்.

ரோமாபுரியைத் தலைமை இடமாகக் கொண்டு  கிறிஸ்தவ திருச்சபை இயங்கி வந்ததை விரும்பாத மற்ற தலைவர்கள் மேற்கு ஐரோப்பிய சபையில் இருந்து மெல்ல விலகத் தொடங்கினர். இந்தப் பிரிவு வலுப்பெற்றது 1054 ஆம் ஆண்டில்தான். அப்போது பிளவு நிச்சயமானது. நிரந்தரமானது.  இவ்வாறு பிரிந்தவர்கள் ”கிரீக் ஆர்த்தோடக்ஸ்” சர்ச் என்ற பெயரில் சபைகளை நிறுவினர் ரஷ்ய, கிழக்கு ஐரோப்பா, மத்திய கரைப் பகுதிகள் போன்ற இடங்களில் இச்சபைகள் தோன்றின. இவர்கள் கத்தோலிக்க பிரிவையும் சேராதவர்கள்,  புரோடஸ்டன்ட் பிரிவையும் சேராதவர்கள்.

*மார்ட்டின் லூதர்*

இதனையடுத்து 1500-ஆம் ஆண்டுகளில் மதச் சீர்திருத்தக் கருத்துக்கள் மேலோங்கின.  ரோமாபுரியைத் தலைமைப் பீடமாகக் கொண்ட திருச்சபைக்கு எதிரான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கின. முக்கியமாக ஜெர்மனியைச் சேர்ந்த மார்ட்டின் லூதர் (Martin Luther) பிரான்ஸின் ஜான் கல்வின் (john calvin) ஆகியோர் சீர்திருத்தச் சிந்தனையாளர்களாக உருவெடுத்தனர்.

*ஜான் கல்வின்*

மேலும் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இன்னும் சில சிந்தனையாளர்களும் இவர்களின் கருத்துக்கு வலுச் சேர்த்த காரணத்தால் கத்தோலிக்கத் திருச்சபையில் மிகப் பெரிய பிளவு தவிர்க்க முடியாததாகிவிட்டது. தனியாகப் பிரிந்த இத்திருச்சபை புரட்டஸ்டன்ட் என்று அழைக்கப்பட்டது.

கத்தோலிக்க பாதிரியாராகவும் ஜெர்மன் நாட்டின் விட்டன் பெர்க் பல்கலைக்கழகத்தில் மதம் சார்ந்த கலைகளுக்கான பேராசிரியராகவும் தேவாலயம் ஒன்றின் பொறுப்பாளராகவும் இருந்த மார்டின் லூதர் கத்தோலிக்க திருச்சபையில் இருந்து பிரிந்து அதற்கு எதிராகச் செயற்படுவதாக அறிவித்தார். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் பாப்பரசர் என்னும் நிலை கடவுளின் மூலம் கிடையாது என்றும் உரக்கக்கூறினார்.

இதனால் வருத்தமடைந்த பாப்பரசர், மீண்டும் மார்ட்டினை சமரசப் பேச்சுவார்த்தைக்காக ரோமுக்கு அழைத்தார். ஆனால் அவரோ பாப்பரசரைப் சந்திக்க மறுத்துவிட்டார்.  தனது நிலைப்பாட்டையே தீவிரமாகத் தொடர்ந்தார். இதனால் கோபமும், எரிச்சலும் அடைந்த பாப்பரசர் 1526-ஆம் ஆண்டு மார்ட்டின் லூதரை குற்றவாளியாகப் பிரகடனம் செய்தார். Deutsche Messe/ German Mass போன்ற அவரது நூல்கள் அனைத்தையும் எரித்துவிடுமாறும் கட்டளையிட்டார். ஆனால் மார்ட்டினோ இதைப் பற்றிக் கவலைப்படாமல் தனது முயற்சியைத் தொடர்ந்தார்.

*மார்ட்டின் லூதரின் ஆட்சேபனைகள்*

கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக அவர் இரண்டு முக்கிய ஆட்சேபனைகளை முன்வைத்தார். ஓன்று, புனிதப் புலி என்னும் சடங்கை  ஏற்க மறுத்தல் இரண்டு பாவ மன்னிப்பு பட்டயங்களை மறுத்தல்.

புனிதப் புலி சடங்கு என்பது பாதிரியார் ஜெபங்களை உச்சரித்துத் தரும் ரொட்டியையும், மதுவையும் பருகுபவரின் உடலில் இயேசு கிறிஸ்து இடம்பிடித்து அவருக்கு நல்வழிக் காட்டுவார் என்பது நம்பிக்கை. இத்திருப் பூஜையை மார்ட்டின் கடுமையாக விமர்சித்தார்.

1517-ஆம் ஆண்டு பாப்பரசர் பத்தாம் லியோ உலகம் முழுவதற்குமான பொது மன்னிப்புப் பட்டயங்களை வெளியிட்டார். இதன் மூலம் அப்பட்டயம் ஒன்றை விலை கொடுத்து வாங்குபவர் மன்னிப்புப் பெறலாம் ரோம்நகரில் உள்ள புனித பத்ரஸ் தேவாலயத்தைக் கட்டுவதற்குத் தேவையான நிதியைத் திரட்டவே பாப்பரசர் மன்னிப்புப் பட்டயங்களை வெளியிட்டார் என்பதால் மார்ட்டின் லூதர் இதையும் விமர்சித்தார்.

கத்தோலிக்கத் திருச்சபை கிறிஸ்தவர்கள் மீது மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வந்த காரணத்தால் புரட்டஸ்டன்ட் பிரிவில் சேர்ந்தவர்கள். கத்தோலிக்க திருச்சபைகளின் கெடுபிடிகளில் இருந்து தப்பிப்பதற்காக புதிய நாடாக விளங்கிய அமெரிக்காவை நோக்கிப் பயணப்பட்டார்கள். அமெரிக்க சமூகத்தில் இவர்கள் பெருமளவில் இடம் வகிப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.

*புதிய இனங்கள்*

16-ஆம் நூற்றாண்டில் தோன்றிய புரட்டஸ்டன்ட் பல சபைகளை நிறுவியது லூதர் இனம்,  கல்வின் இனம்,  சுவிங்லி இனம், அங்லிக்கன் இனம் என்று பல இனங்கள் உருவாகின.

இதில் அங்லிக்கன் இனத்தில் (Anglican) மூன்று முக்கிய அடிப்படைக் கொள்கைகள் பின்பற்றப்பட்டன.

1) விசுவாசத்தினதால் மட்டுமே ஒருவன் நற்கதி அடைய முடியும் என்பதும், பக்தி யோகமே ஒருவனுக்கு மீட்பைத் தரும் என்பதும் மட்டுமல்லாமல் புண்ணியம் முக்திப் பேற்றின் அடையாளம் என்பதும்  இவர்களின் நம்பிக்கை.

2) கிறிஸ்தவ திருமறை பைபிள் மட்டுமே சகல இறை உண்மைகளுக்கும் ஒரே ஆதாரம். திருச்சபையின் வளர்ந்த மரபு, பாரம்பரியம் ஆகியவற்றிற்கு திருமறையின் அதிகாரம் கிடையாது.

3) மதகுரு மட்டுமே ஆசாரியார்கள் என்பதை ஒப்புக் கொள்ள மறுத்து, சகல விசுவாசிகளும் ஆசாரியார்களே என்கிறது. இறைவனோடு ஒவ்வொருவரும் நேரடியாகத் தொர்பு கொள்வதே சரி. திருச்சபை மூலமாகத்தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது தவறானது.

புரோடஸ்டன்ட் பிரிவில்  மக்களை ஈர்க்க மார்ட்டின் கையாண்ட மூன்று முக்கிய வழிமுறைகள்

o தேவாலயங்கள் சேர்த்து வைத்திருந்த பெருமளவிலான சொத்துக்களை அபகரித்துக் கொள்ள வேண்டும். தேவாலயங்கள் மற்றும் மடங்களை பொதுமக்கள் பயனடையும் விதத்தில் கல்விக் சாலைகளாகவும், மருத்துவமனைகளாகவும் மாற்றிவிடுமாறு அன்றைய மன்னர்களைத் தூண்டும் விதத்தில் நூல்களை வெளியிட்டார்.

o ஹேஷ் ஆட்சியாளர் ஒருவர் தனது மனைவி உயிருடன் இருந்தபோது, இன்னொரு பெண்ணை மணமுடிக்க விரும்பினார். அப்போது இரு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று உரக்க அறிவித்தார் மார்ட்டின் லூதர், இதன்மூலம் ஆட்சியாளரின் ஆதரவையும் அன்பையும் பெற்றார். 

o பாதிரியார்கள், மதகுருக்கள் ஆகியோர் துறவறத்தினால் பெரும் அவதி அடைந்து வந்த நிலையில் அவர்களின் ஆதரவைத் தன் பக்கம் ஈர்ப்பதற்கு மற்றொரு உத்தியைக் கையில் எடுத்தார்.  கார்தரின் என்ற பெண் துறவியைப் பலவந்தமாக அடைந்து திருமணம் செய்தார். பின்னரும் அருட்தந்தையாக நீடித்து முன் மாதிரியாகத்  திகழ்ந்தார்.

குடும்ப வாழ்வில் ஈடுபட்டு அருட்தந்தையாகத் திகழ்ந்த மார்ட்டின் லூதர், பின்னர் நோய்வாயப்பட்டு 1546-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். இறை உண்மைகளை விளக்கும் அதிகாரம்  கத்தோலிக்க மதத்தில் பாப்பரசரைத் தலைவராகக் கொண்ட திருச்சபைக்கே உண்டு. ஆனால், புரோடஸ்டன்ட் மத்தினரோ பைபிளை மட்டுமே இறை உண்மைகளின் ஒரே ஆதாரமாகக் கொண்டிருந்தனர். இதனால் சீர்திருத்தவாதிகளும், ஆய்வாளர்களும் பைபிளின் உண்மைக் கருத்துகளுக்கு மாறுபட்ட விளக்கங்களை வெளிப்படுத்தினர். இதனால் புரோடஸ்டன்டிற்குள் சர்ச்சைகள் கிளம்பி பல்வேறு உட்பிரிவுகள் தோன்றின.

இங்கிலாந்தின் எமதடிஸ்சபை, பப்டிஸ்ட் சபை, கொங்கிரிகேஷனல் சபை ஆகியவை அங்லிக்கன் சபையில் இருந்தும் தனித்தனியாகப் பிரிந்தன. இச்சபைகள் யாவும் மிஷனரிகளை அமைத்து பிறநாடுகளில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. கோங்கிரிகேஷனல் சபையின் ஒரு பகுதியினர் பின்னர் அமெரிக்காவில் குடியேறினர்.

*புரோடஸ்ட்ன்ட்டின் கருத்துகள்*

o இயேசு கிறிஸ்துவுக்கு இரு இயல்பு நிலைகள் உள்ளன.
o பரிசுத்த ஆவியானவர் பிதா மற்றும் சுதனில் இருந்து தோற்றம் பெற்றவர்.
o மதகுருக்களிடம் பாவமன்னிப்பு கோர வேண்டியதில்லை.  நேரடியாக கடவுளிடமே பாவமன்னிப்பு கோரலாம்.
o ரொட்டி மற்றும் மது இயேசுவின் சதை மற்றும் ரத்தமாக மாறுகிறது என்பது ஏற்புடையதல்ல.
o சுவிசேஷத்தின் சில பகுதிகள் தேவையற்றது என்பதோடு அதனை நீக்கவும் செய்தல்.
o இயேசு மீண்டும் இப்பூமிக்கு வந்து ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்வார்.
o இயேசுவைப் பிரசவித்த பின்னர் மீண்டும் வேறு குழந்தைகளை மரியாள் பெற்றெடுத்தார்.
o பாப்பரசர்தான் சுவிசேஷத்திற்கான விளக்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல,  ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் சுவிசேஷ விளக்கம் அளிக்கும் உரிமை உண்டு.
o சுவிசேஷத்தில் காணப்படும் வழிபாட்டு முறைகள் மட்டுமே உண்மையானது.  அதனை மட்டுமே பின்பற்ற வேண்டும்.

*கொலைக்களம்* 

கிறிஸ்தவ மதத்தின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்ததோடு பாப்பரசரின் அதிகாரத்தையும் பெருமளவில் குறைப்பதான நடவடிக்கையை எடுத்து, மதத்தைப் பிளவுபடுத்தி உருவானது புரோடஸ்டன்ட் என்பதால் இப்பிரிவினர் மீது பாப்பரசர்கள் கடுமையான கோபமடைந்தனர். லட்சக்கணக்கில் உயிர்ப் பலி கொண்டதான போர்களை அவர்கள் நடத்தினர்.

16-ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் கத்தோலிக்கர்களும், புரோடஸ்டன்ட்களும் தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக யுத்தத்தில் ஈடுபட்டனர். 1536ஆம் ஆண்டு அயர்லாந்தில் புரோடஸ்டன்ட் சித்தாந்தத்தை ஆங்கிலேயர்கள் திணிக்க முயன்றனர்.  இதனை எதிர்த்து மிக நீண்ட சண்டை அங்கே நடந்தது.  கிட்டத்தட்ட 18-ஆம் நூற்றாண்டு வரை நீடித்த இச்சண்டையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் செத்து மடிந்தனர்.

1572-ஆம் ஆண்டு பாப்பரசர் பதின்மூன்றாம் கிரிகோரி என்பவரின் ஆசியுடன், புனித பர்த்தோலோமோ என்னும் இடத்தில் பண்டிகை தினத்தன்று கத்தோலிக்கர்கள் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். இக்கொலைக் களத்தில் சுமார் 30 ஆயிரம் புரோடஸ்டன்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள் வெட்டியும்,  மரங்களில் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்பட்டனர். ஆனால் வெறும் 2 ஆயிரம் பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக கத்தோலிக்கர்கள் சமாளித்தனர். ஜெர்மனியிலும் இரு பிரிவினருக்கும் இடையே முப்பது ஆண்டுக்காலம் சண்டை நீடித்தது 1618-ஆம் ஆண்டு வரை நீடித்த இப்போரில் லட்சக்கணக்கான மக்கள் மடிந்தனர்.

153-ஆம் ஆண்டு அயர்லாந்தில் புரோடஸ்டன்ட் சித்தாந்தத்தை ஆங்கிலேயர்கள் திணிக்க முயன்றனர்.  இதனை எதிர்த்து மிக நீண்ட சண்டை அங்கே நடந்தது. கிட்டத்தட்ட 18-ஆம் நூற்றாண்டு வரை நீடித்த அச்சண்டையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். ஸ்பெயின் நாட்டில் அண்மைக்காலத்தில், அதாவது 1936 முதல் 1939-ஆம் ஆண்டு வரை கத்தோலிக்கர்களுக்கும், புரோடஸ்டன்டுகளுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடந்தது.  இதில் 6 ஆயிரத்து 845 கத்தோலிக்க மத குருக்கள் உட்பட 3 லட்சத்து 6 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

*யூதர்களுக்கு ஆதரவு*

புரோடஸ்டன்ட் மதம் தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதால் விவிலிய நூற்கள் பல்வேறு மொழிகளில் தாராளமாக மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன. விவிலியத்தை விளக்கும் உரிமை அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் உள்ளது என்னும் புரோடஸ்டன்ட் மதப் பிரிவினரின் கொள்கை இதன் காரணமாகப் பல காலமாக மத குருக்களின் பாதுகாப்பில் தேவாலயங்களுக்குள் முடங்கிக் கிடந்த பழைய ஏற்பாடு அனைவரின் கரங்களிலும் கிடைக்கும் நிலை உருவானது.

ஆபிரஹாமுடன் கர்த்தர் உடன்படிக்கை செய்து கொண்ட காலம் முதல் உலகம் அழியும் வரை பாலஸ்தீனம் யூதர்களின் பூர்வீகம் என்ற கருத்து இவர்களால் உறுதியாகக் கொள்ளப்பட்டது. பாலஸ்தீனத்தில் சியோனிச சாம்ராஜ்யத்தை யூதர்கள் உருவாக்கியதும்,  அங்கே மீண்டும் இயேசு கிறிஸ்து தோன்றுவார் என்பன போன்ற யூதர்களின் நம்பிக்கை கிறிஸ்தவ சமூகத்திற்குள் தாராளமாகப் பரவின.

இந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலும் அதிகளவில் புரோடஸ்டண்ட் மதத்தினரைக் கொண்டிருப்பதாலும் அமெரிக்கா யூதர்கள் வசித்துவரும் இஸ்ரேலுக்கு ஆதரவுக் கரம் நீட்டக் காரணமாக அமைந்தது.  தொடர்ந்து அமெரிக்காவும்,  மேற்குலக நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இன்று உலகளவில் நூற்றுக்கணக்கில் புரோடஸ்டன்ட் கிளைகள் பரவிக் கிடக்கின்றன.  கத்தோலிக்கப் பிரிவுக்கு இணையாக மிகப் பெரிய மதமாக இது விளங்குகிறது. 

*(தொடரும்)*


மத அரசியல் - அத்தியாயம் (06)

_____________________________
எழுத்து : C.P.சரவணன் 
பகிர்வு : 
_____________________________
*பெந்தகோஸ்து (Pentecost)*

பெந்தகோஸ்து சபை என்பது கிறிஸ்துவ சமயத்தின் மற்றொரு பிரிவு தூய ஆவியில் திருமுழுக்கு என்னும் வழியாகக் கடவுள் பற்றிய நேரடி அனுபவத்தைப் பெறலாம் என்று வலியுறுத்துகிறது இச்சபை. விவிலியத்தில் எந்தவிதமான தவறான தகவலும் கிடையாது என்று நம்பும் இச்சபை, இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்டோர் ஒவ்வொருவரும் அவரைத் தம் சொந்த மீட்பராக ஏற்பதிலேயே மீட்பு அடங்குவதாக நம்புகிறது.

பாவத்தை விட்டு விட்டு மனமாற்றம் அடைவது, புதுப் பிறப்பு அடைவது, தூய ஆவியில் திருமுழுக்குப் பெறுவது என்னும் வகையில் ஒருவர் மீட்பு அடைகிறார் என்று பெந்தகோஸ்து சபைகள் பொதுவாக போதிக்கின்றன. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக விரைவிலேயே நிகழப்போகிறது என்னும் நம்பிக்கையின் அடிப்படையில், கிறிஸ்தவர்கள் புத்துணர்ச்சி பெறவேண்டும் என்றும், தூய்மைபெற வேண்டும் என்றும் கூறுகிறது பெந்தகோஸ்து.

*சார்லஸ் ஃபாக்ஸ் பாராம்*

‘உறுதியான இறை நம்பிக்ககை இருந்தால் எந்த நோயிலிருந்தும் குணமடையலாம் என்ற கருத்தை 1900-ஆம் ஆண்டு சார்லஸ் ஃபாக்ஸ் பாராம் (Charles Fox Parham) முன்வைத்தார். அதன் அடிப்படையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அசூசா வீதியில் எழுப்புதல் கூட்டங்கள் (Azusa Street Revival) மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டன.

*வில்லியம் செமோர்*

இக்கூட்டங்கள் அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை எழுப்பி பின்னர் உலகம் முழுவதும் பெந்தகோஸ்து இயக்கமாகப் பரவியது. இக்கூட்டத்தை வில்லியம் செமோர் (William J. Seymour)தலைமையேற்று நடத்தினார். இந்த இயக்கத்தில் மூவொரு இறைவன்கொள்கை (doctrine of the Trinity) என்பதை ஏற்கும்பிரிவு (Trinitarian) என்றும்,  ஏற்காத பிரிவு (Non-Trinitarian) என்றும் இரு பெரும் பிரிவுகள் காணப்படுகின்றன.

பெந்தகோஸ்து இயக்கத்தில் 700 சபைப் பிரிவுகளும், தனிச் சபைகளும் உள்ளன. மைய அதிகாரம் உடைய சபை என்று எதுவும் இல்லை என்றாலும், பல பெந்தகோஸ்து உலக இணைப்பு என்னும் அமைப்பின் கீழ் இயங்கி வருகின்றன.

*பெந்தகோஸ்துவின் பொருள்* 

வருடத்தில் மொத்தம் 365 நாட்கள் இருந்தபோதிலும், ஒரேயொரு நாளை பெந்தபோஸ்து நாள் என்று இச்சபை கொண்டாடுகிறது. பெந்தகோஸ்து என்றால் ஐம்பதாவது நாள் என்று பொருள் இஸ்ரேல் மக்கள் பஸ்கா என்னும் பண்டிகையை முக்கியமாகக் கொண்டாடுகிறது.  இதன்பின்னர் ஐம்பதாவது நாள் அன்று பெந்தகோஸ்து நாள் கொண்டாடப்படுகிறது.

பஸ்கா பண்டிகைக்குப் பிறகு ஐம்பதாவது நாள் இஸ்ரேலியர் சினாய் மலைக்குச் சென்றார்கள். அங்கே அக்னி, மின்னல், இடி முழுக்கம், பூமி அதிர்வு ஆகியவற்றைக் கண்டார்கள். அப்போது கர்த்தர் சினாய் மலையில் இறங்கி இருந்தார். அது ஒரு அபிஷேக அனுபவமாக இருந்தது. அன்று 120 பேர் அபிஷேகம் பெற்றார்கள் 3 ஆயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள்.

*பெந்தகோஸ்து கொள்கை* 

பெந்தகோஸ்து 4 முக்கிய கொள்கைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

1)  இயேசு மீட்பளிக்கிறார்
2) தூய ஆவியில் திருமுழுக்கு வழங்குகிறார்
3) நோய்களைக் குணமாக்குகிறார்.
4) மீட்பு அடைந்தவர்களைத் தம்மோடு எடுத்துக் கொள்ள மீண்டும் வரவிருக்கிறார்.

புரட்டஸ்டன்ட் பிரிவில் இருந்து பிரிந்த காரணத்தால் அதன் நம்பிக்கைகள் பெந்தகோஸ்துவிலும் காணக்கிடக்கிறது. இயேசு சிலுவையில் மரித்தல், அடக்கம் செய்யப்படுதல், உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் வழியாக மனிதர்களுக்குப் பாவ மன்னிப்புக் கிடைக்கிறது. மனித குலம் கடவுளுடன் நல்ல உறவைப் பெறுகிறது.இப்படி நம்புகிறது இந்த இயக்கம்.

மனிதர்கள்  மறுபிறப்பு அடைய வேண்டும்.  இந்த மறுபிறப்பு இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வதன் மூலமாகவே கிடைக்கப் பெறுகிறது என்கிறது பெந்தகோஸ்து. கடவுள் வழங்கும் மீட்புக் கொடையை ஏற்போர் மீட்பு அடைந்து விண்ணகம் சேர்வர் என்றும், அதனை வேண்டாம் என்று புறக்கணிப்போர் நரகம் செல்வர் என்றும் பெந்தகோஸ்து சபையினர் நிச்சயமாக நம்புகின்றனர்.

*திருச்சடங்குகள்*

இயேசு கிறிஸ்துக்கு சடங்குகள் சிலவற்றைச் செய்யும் பழக்கம் இவர்களிடமும் காணப்படுகிறது. திருவருள் சாதனங்கள் என்று கத்தோலிக்கமும், புரட்டஸ்டன்டும் அழைப்பதை இவர்கள் பயன்படுத்துவதில்லை. கடவுளின் அருளானது நம்பிக்கை கொண்டோர் மீது நேரடியாக இறங்குவதாகவும், சடங்கை நிகழ்த்தும் தலைவர் ஒரு கருவியாகச் செயல்படுவதாகவும் இவர்கள் கூறுகின்றனர். நற்கருணை அல்லது இயேசுவின் இரா உணவுச் சடங்கு இயேசுவின் நினைவாகச் செய்யப்படுவதாகவும், இதனை நிகழ்த்த இயேசு கட்டளையிட்டுள்ளதாகவும் நம்புகின்றனர்.

இரா உணவின்போது இயேசு நிகழ்த்திய பாதம் கழுவும் சடங்கு இப்போதும் சில பெந்தகோஸ்து சபைகளால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  இச்சடங்கு தாழ்ச்சியை வெளிப்படுத்துவதாக நம்பிக்கை.

*பின்பற்றுதல்* 

உலகில் சுமார் 50 கோடிப் பேர் பெந்தகோஸ்து இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் கிறிஸ்தவ மக்கள் தொகையில் சுமார் 13 சதவீதம். புரட்டஸ்டன்ட் பிரிவுகளில் உலகளவில் மிகவும் பெரியதாக பெந்தகோஸ்து சபை விளங்குகிறது. இவ்வியக்கம் உலகின் தென்கோளப் பகுதிகளில் அதிகமாகப் பரவி வருகிறது. 1960ஆம் ஆண்டுகளில் இருந்து பெந்தகோஸ்து சபையின் சில கூறுகள் மைய கிறிஸ்தவ சபைகளால் ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

*(தொடரும்)*


மத அரசியல் - அத்தியாயம் (07)

_____________________________
எழுத்து : C.P.சரவணன்  
பகிர்வு : 
_____________________________

கிறிஸ்தவ மதத்தில் இன்று ஆயிரக்கணக்கான பிரிவுகள் இருக்கின்றன. இவையல்லாமல் யேகோவாவின் சாட்சி,  அசெம்ளி ஆப் போட் செவன்த்டே அட்வென்டிஸ்ட் என்பன உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவத்தில் இருந்து பிரிந்து பிரிவுகளும் உலகம் முழுவதும் காணக்கிடக்கின்றன.


*யேகோவாவின் சாட்சி (Jehovah’s Witnesses)*

நன்றாக ஸ்தாபிக்கப்பட்ட மதத்திலிருந்து பிரிந்து வரும் ஒரு தொகுதியையே மதப்பிரிவு என்று சிலர் சொல்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் எந்த மத தொகுதியிலிருந்தும் பிரிந்து வந்தவர்கள் அல்ல. மாறாக, முதல் நூற்றாண்டில் கடைப்பிடிக்கப்பட்ட கிறிஸ்தவ மதத்தை மீண்டும் நிறுவியிருப்பதாக சொல்கிறார்கள். 

யெகோவாவின் சாட்சிகள் 230-க்கும் அதிகமான தேசங்களிலும் நாடுகளிலும் ஊழிய வேலையை மும்முரமாக செய்துகொண்டு வருகிறார்கள். நாங்கள் எங்கு வசித்தாலும் சரி எங்கள் பற்றுறுதி யெகோவாவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் மட்டுமே, அமெரிக்க அரசாங்கத்திற்கோ வேறெந்த மனித அரசாங்கத்திற்கோ அல்ல.—யோவான் 15:19; 17:15, 16. எங்களது அனைத்து போதனைகளும் பைபிள் அடிப்படையிலானவை, எந்த அமெரிக்க மத தலைவர்களின் கருத்துகளையும் சார்ந்தவை அல்ல.—1 தெசலோனிக்கேயர் 2:13. நாங்கள் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறோம் எந்த மத தலைவர்களையும் அல்ல.—மத்தேயு 23:8-10 என்று சொல்கிறார்கள்.

*சார்லஸ் டேஸ் ரஸ்ஸல்*

சார்லஸ் டேஸ் ரஸ்ஸல் (Charles Taze Russell) என்ற அமெரிக்கர் தனது சபையில் பின்பற்றப்பட்ட விசுவாசப் பிரமாணங்கள் மீது ஐயம் கொண்டு பிற சபைக் கொள்கைகளையும் பைபிளையும் ஆராயத் துவங்கினார். இவர் வேதாகம மாணவர் அமைப்பு எனும் அமைப்பைத் துவங்கினர். இந்த அமைப்பு தான் யெகோவாவின் சாட்சிகள் அமைப்பின் முன்னோடி. 1879 இல் சீயோனின் காவற்கோபுரப் பாதைச் சமூகம் என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவராக கோன்லி எனும் செல்வந்தர் இருந்தார். ரசல் இந்த அமைப்பின் இரண்டாவது தலைவரானார். இவர் தன் வாழ்நாளில் 50,000 பக்கங்களுக்கும் அதிகமாக எழுதினார். இவர் உயிர் வாழ்ந்த காலத்தில் இவர் எழுத்துகள் 2 கோடி புத்தகங்களாக உலகெங்கும் பல்வேறு மொழியில் வழங்கப்பட்டன. காவற்கோபுரம் என்ற பெயரில் தற்போது வெளியிடப்படும் இதழையும் இவர் தொடங்கினார். காவற்கோபுரம் தவிர வேறு எந்த இதழையும் சீயோனின் காவற்கோபுர அமைப்பு வெளியிடக் கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டளைகளை தனது உயிலில் எழுதியிருந்தார். 1916 ஆம் ஆண்டில் இவர் மரணமடைந்தார்.


*ஜோசஃப் பிராங்க்ளின் ரூதர்ஃபோர்டு*

ரசலுக்குப் பின்னர் வேதாகம மாணவர் இயக்கத்தின் தலைவராக ஜோசஃப் பிராங்க்ளின் ரூதர்ஃபோர்டு(Joseph Franklin Rutherford) என்பவர் தெரிவு செய்யப்பட்டர். இவரே 1931 ஆம் ஆண்டு இவ்வியக்கத்தின் பெயரை ஏசாயா 43:10 ஐ தழுவி "யெகோவாவின் சாட்சிகள்" என மாற்றினார். நிர்வாக ரீதியிலான மாற்றங்களைச் செய்தார். ரசல் தனது உயிலில் காவற் கோபுரம் தவிர வேறு இதழ் வெளியிடக் கூடாது என்று சொல்லியிருந்த போதும் ரூதர்ஃபோர்டு விழித்தெழு! என்ற பெயரிலான இன்னொரு இதழையும் துவக்கினார். குறிப்பாக வேற்று மதத்தினர் மற்றும் வேற்றுச் சபையினருக்கு வழங்க இந்த இதழை வழங்கினர். இந்த இதழில் சமயம் மட்டுமின்றி உடல்நலம், சுற்றுச் சூழல் உள்ளிட்ட பல தகவல்கள் இடம்பெறும் வகையில் செய்தார்.

யெகோவாவின் சாட்சிகள் (Jehovah's Witnesses) என்போர் திரித்துவக் கொள்கையற்ற புத்துலக நம்பிக்கையுடைய மதப் பிரிவினராவர். இம் மதத்தில் எட்டு மில்லியன் பேர் இணைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் நியூயார்க் என்பது யெகோவாவின் சாட்சிகளின் தலைமை அமைப்பு ஆகும்.
யெகோவாவின் சாட்சிகள் வீடு வீடாக வந்து பைபிள் மனிதகுலத்திற்கு தரும் உண்மையான நம்பிக்கையை அறிவிப்பதற்கு முனைப்புடன் செயல்படுபவர். காவற்கோபுரம் (The Watchtower) மற்றும் விழித்தெழு (Awake!) போன்ற இதழ்களை வழங்குவர்

*ஆங்கிலிக்க ஒன்றியம்  (Anglican Communion)*


ஆங்கிலிக்க ஒன்றியம்  என்பது உலகம் முழுவதுமுள்ள ஆங்கிலிக்க திருச்சபைகளின் சேர்க்கையாகும். இது உலகத்தில் மிகப்பெரிய மதத்தின் இரண்டாம் பெரிய மதப்பிரிவாகும். இங்கிலாந்து திருச்சபை மற்றும் அதன் தலைவர் கன்டபரி பேராயருடன் முழு ஒற்றுமையோடு இருக்கும் திருச்சபைகளின் ஒன்றியமாகும். ஆங்கிலிக்க திருச்சபைகளிற்கு பிராந்திய பேராயர்கள் தலைமையேற்கின்றனர். மாறாக நாடு, பிரதேச மட்டத்திலான முழு அதிகாரம் கொண்ட திருச்சபைகளே காணப்படுகின்றன.
77 மில்லியனுக்கும் மேலான பின்பற்றுனர்களைக் கொண்ட அங்கிலிக்க ஒன்றியம் உரோமன் கத்தோலிக்க திருச்சபை , கிழக்கு மரபுவழி திருச்சபைக்கு அடுத்தப்படியாக உலகின் மூன்றாவது பெரிய சமயப் பிரிவாகும். தமிழ் நாடு உட்பட தென் இந்திய மாநிலங்களும் இலங்கையும் ஒரு பிரிவாக தென்-இந்திய திருச்சபையின்கீழ் உள்ளன.

*தென் இந்திய திருச்சபை" (Church of South India)*

தென் இந்திய திருச்சபை என்னும் கிறித்தவ சபைப் பிரிவு இங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பைப் பின்பற்றி இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது. இது நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, இந்தியாவில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கிறித்தவ சபை அமைப்பாகத் திகழ்கிறது. இது தென்னிந்திய ஆங்கிலிக்கம், மெதாடிஸ்ட், பிரெஸ்பிட்டேரியன் மற்றும் புராட்டஸ்தாந்து ஆகிய திருச்சபைக் குழுக்களை இணைத்து அமைக்கப்பட்டது.  

*ஆர்தோடக்ஸ்*

கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய தேவாலயங்களுக்கிடையே ஏற்பட்ட பிரிவினைகளின் காரணமாகவே இவர்களின் பகைமைத்துவம் முதலாம் நூற்றாண்டில் உச்சகட்டத்தை அடைந்து அது இன்று வரை தொடர்கிறது. மொழி, கலாச்சாரம் மற்றும் அரசியல் வேற்றுமைகள் பகைமையை மேலும் அதிகப்படுத்தின .4-ஆம் நூற்றாண்டில் இருந்து 11-ஆம் நூற்றாண்டு வரை துருக்கி கிழக்கத்திய கிறித்துவத்திற்க்கு முக்கிய இடமாக இருந்தது. பிற்காலத்தில் அரசியல் எதிரிகளான மேற்கத்திய புனித(?) ரோமர்கள் அதை கைப்பற்றினர். மேற்கத்திய நாடுகளில் கிறித்துவம் அன்றைய ஹிப்போவின் அகஸ்டின்(354 - 430) என்பவர்க்கு கீழ் இருந்தது.
பிற்காலத்தில் கிழக்கத்திய கிறித்துவத்தின் கோட்பாட்டில் இருந்து முழுமையாக விலகியது. தேவாலயத்தின் அதிகாரத்துவ சித்தாந்தத்தில் இரு வேறு கருத்துகள் இருந்ததே பிரிவினைகளுக்கு முக்கிய காரணமாக இருந்த்து. ரோமானிய கிறித்துவத்திற்கு முக்கிய காரணம் அப்போஸ்தலர்களே தங்களின் தேவாலய மற்றும் கொள்கை கோட்பாடுகளை வகுத்து கொடுத்தனர் என்பது தான். ஆனால் இச்சித்தாந்தம் 'ஆர்தோடக்ஸ்' பிரிவினர்களுக்கு முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத சித்தாந்தமாக இருந்தது.

*கிழக்கத்திய கிறித்துவர்கள்*

கிழக்கத்திய கிறித்துவர்கள் அனைத்து தேவாலயங்களையும் அங்கீகரித்தாலும் ரோமானிய கிறித்துவர்கள் தலைமை பாதிரியாரை முதன்மை ஸ்தானம் கொண்டவராக கருதவில்லை.கிழக்கத்திய கிறித்தவர்களுக்கு கொள்கை கோட்பாடுகளில் ஏற்படும் முரண்களையும், பிரச்சினைகளையும் தீர்க்க தலைமை பாதிரிக்கோ அல்லது ஒரு தனி தேவாலயத்திற்கோ அதிகாரம் இல்லை என நம்பினர்.மாறாக இப்பிரச்சினைகளை தீர்க்க அதற்கேயான குழுவை நிறுவி வைத்திருந்தினர்.இறுதியில் ரோமானிய தேவாலயத்தினர் முற்றிலும் தவறான கொள்கை கோட்பாடுகளை தத்தெடுத்து வளமை சம்பிரதாயங்களை மாற்றியது. 'போப்பர்கள்' பாவம் செய்யாதவர்கள், தூய்மையானவர்கள் என்ற சித்தாந்தத்தை புகுத்தியது. இச்சித்தாந்தம் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய கிறிஸ்துவர்களிடையே மிகப் பெரும் பகைமையை வித்திட்டது.

*மெதடிஸ்தம் (Methodism)*

மெதடிஸ்தம் என்பது கிறிஸ்தவ மதப்பிரிவான மறுப்பாளர்களில் (protestant) ஒரு பிரிவினர் ஆவர். 18 ம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் இம்மதப்பிரிவு தோன்றியது. முதன் முதலில் ஆங்கிலத் திருச்சபையைச் சேர்ந்த ஜோன் வெஸ்லி என்ற மதகுருவானவர் மெதடிஸ்த மதக் கொள்கையைப் பரப்பினர்.
இதனால் இம்மதக் கொள்கை பொதுவாக வெஸ்லிய மெதடிசம்' எனவும் அழைக்கப்படுகிறது. ஜோன் வெஸ்லி இம்மதத்தை ஆங்கிலத் திருச்சபையின் போட்டிக் குழுவாகவே இதனை உருவாக்கினார். மெதடிஸ்தத்தைப் பின்பற்றும் ஆங்கிலிக்கர்கள் மெதடிஸ்துகள் என அழைக்கப்படுகின்றனர். 18 ம் நூற்றாண்டில் தோன்றிய மெதடிசத்தில் வேல்சிய மெதடிஸ்துகளும் உள்ளனர்.

*ஆங்கிலிக்க ஒன்றியம் (Anglican Communion)*

ஆங்கிலிக்க ஒன்றியம் அல்லது ஆங்கிலேய ஐக்கியம் என்பது உலகம் முழுவதுமுள்ள ஆங்கிலிக்க திருச்சபைகளின் சேர்க்கையாகும். இது உலகத்தில் மிகபெரிய மதத்தின் இரண்டாம் பெரிய மதபிரிவாகும். இங்கிலாந்து திருச்சபை மற்றும் அதன் தலைவர் கன்டபரி பேராயருடன் முழு ஒற்றுமையோடு இருக்கும் திருச்சபைகளின் ஒன்றியமாகும். ஆங்கிலிக்க திருச்சபைகளிர்க்கு பிராந்திய பேராயிர்கள் தலமையேற்கின்றன. மாறாக நாடு, பிரதேச மட்டத்திலான முழு அதிகாரம் கொண்ட திருச்சபைகளே காணப்படுகின்றன.

77 மில்லியனுக்கும் மேலான பின்பற்றுனர்களைக் கொண்ட அங்கிலிக்க ஒன்றியம் உரோமன் கத்தோலிக்க திருச்சபை , கிழக்கு மரபுவழி திருச்சபைக்கு அடுத்தப்படியாக உலகின் மூன்றாவது பெரிய சமயப் பிரிவாகும்.தமிழ் நாடு உட்பட தென் இந்திய மானிலங்களும் இலங்கையும் ஒரு பிரிவாக தென்-இந்திய திருச்சபையின்கீழ் உள்ளன.
இங்கிலாந்து திருச்சபை, இங்கிலாந்தின் அதிகாரபூர்வமான கிறித்தவத் திருச்சபையாகும். இது உலகெங்கும் உல்ல சர்வதேச ஆங்கிலேய ஐக்கியம் எனப்படும் திருச்சபை குடும்பத்தின் முதல் சபையாகும்.இத்திருச்சபை தன்னை திருத்தப்பட்ட கத்தோலிக்கமாகவும் (உரோமன் கத்தோலிக்க திருச்சபை) என்கிறது.

*கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்  (Protestant Reformation)*

கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் 1517 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ சமய சீர்த்திருத்த இயக்கமாகும். இதற்கான ஏதுநிலை 1517 ஆண்டுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தன. இது மார்டின் லூதருடன் தொடங்கி 1648 ஆம் ஆண்டின் மேற்குபாலிய சமதான ஒப்பந்தத்துடன் முடிவுற்றதாகக் கொள்ளப்படுகிறது[1]. இவ்வியக்கம், கத்தோலிக்கத் திருச்சபையை சீர்த்திருத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது.
மேற்குலக கத்தோலிக்கர்கள், சிலவேளைகளில் பாப்பரசர் வரை சென்ற, கத்தோலிக்க மேலிடத்தில் நிழவிவநத ஒழுக்கக் கேடுகளாலும் சமயக் கோட்பாடுகளில் செய்யப்பட்ட திரிபுகள், திணிப்புகள் என்பவற்றாலும் விரக்தியிற்றிருநதனர். முக்கியமாக பாவமன்னிப்பு விற்பனை, சபையின் முக்கிய பதவிகளை வணிகப் பொருட்கள் போல வாங்கி விற்றல் (சீமோனி) போன்றவை கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் தொடங்கப்பட்டதற்கான உடனடிக் காரணங்களாக அமைந்தன.

*கிழக்கு மரபுவழித் திருச்சபை (Eastern Orthodox Church)*

கிழக்கு மரபுவழித் திருச்சபை உலகில் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ சபையாகும். இச்சபையினர் இயேசுவாலும் அப்போஸ்தலர்களாலும் நிறுவப்பட்ட திருச்சபையின் உண்மையான தொடர்ச்சியாகத் தம்மைக் கருதுகின்றனர். இச்சபையில் ஆரம்பத்தில் இயற்றப்பட்ட சமயக் கோட்பாடுகளில் மாற்றங்கள் ஏற்கப்படுவதில்லை.
இச்சமயக்கோட்பாடுகள் கி.பி. 4 தொடக்கம் 8 வரையான காலப்பகுதியில் நடைப்பெற்ற 7 புனித சங்கங்களில் இயற்றப்பட்டவையாகும். கத்தோலிக்க, ஒரியண்டல் திருச்சபைகள் இச்சபையிலிருந்து வெளியேறிய பகுதிகளாக கொள்ளப்படுகிறன. நாட்டுக்கு நாடு பிரிந்து காணப்பட்டாலும் (இரசிய கிழக்கு மரபுவழி திருச்சபை, சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபை...) அதிகாரபூர்வமாக நைசின் விசுவாச அறிக்கையின் படி தம்மை "ஒரே கத்தோலிக்க அப்போஸ்தலிக திருச்சபை" என அழைத்துக் கொள்கிறது.
இச்சபைக்கு தனித் தலைவர் கிடையாது, மாறாக இது இன மற்றும் நாட்டு எல்லைகளை கருத்திற் கொண்டு அதிகார அலகுகளாகப் பிரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. ஒவ்வெரு அலகும் சினோட் எனப்படும் ஆயர்கள் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. சினோட்டில் எல்லா ஆயர்களும் சம அதிகாரம் கொண்டவர்களாகக் காணப்படுவதோடு மற்றைய ஆயரது அதிகாரங்களில் தலையிடுவதில்லை. மேலும் எப்போதாவது புனித சங்கமொன்றை கூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால் கொன்சாந்தினோபிலின் ஆயர் "சமமானவரிடையே முதலாமவர்" என்ற பதவியை கொண்டிருப்பார்.(அதாவது புனித சங்கத்தில் தலைமைப் பதவியைக் கொண்டிருப்பார்).

*மொர்மனிசம் (Mormonism)*

மொர்மனிசம் ஒரு கிறிஸ்தவ சமயப் பிரிவு. மொர்மனிசம் Latter Day Saint movement மற்றும் The Church of Jesus Christ of Latter-day Saints ஆகியவறின் சமய, பண்பாட்டு, கருத்து போக்குளைக் குறித்து நிற்கின்றது. Book of Mormon இந்த சமயப் பிரிவின் மறைநூலாகும். இது பைபிளையும் தனது சமய நூற்களில் ஒன்றாக கருதுகிறது. மொர்மனிசமும் மையநீரோட்ட கிறீஸ்துவ சமயப்பிருவுகளுடன் ஒரு சுமூகமான உறுவு இல்லை.பல விசித்திரமான சமயக் கொள்கைகள் மொர்மனிசத்திடம் உண்டு. சில வழிமுறைகளைப் பின்வற்றுவதன் மூலம் மனிதர்கள் கடவுளாக வரலாம் என்பது, பல மனைவிகளை மணப்பது, சமய குற்றம் (sin) இழைத்தோரைக் கொல்வது போன்றவை இவற்றுள் அடங்கும்.

*லூதரனியம்*

லூதரனியம் என்பது "நம்பிக்கையால் மட்டுமே மீட்பு உண்டு" என்னும் கொள்கையை கொண்டுள்ள இறையியல் இயக்கத்தைக் குறிக்கும். இது தன் பெரும்பாண்மையான கொட்பாடுகளை மார்ட்டின் லூதர் என்னும் ஜெர்மனிய சீர்திருத்தவாதியிடமிருந்து பெருகின்றது. லூதர் காலத்திலேயே அவர் தொடங்கிய சீர்திருத்தம் மாற்று கருத்துக்களால் பலவாறாகப் பிரிந்தது. ஆங்கிலியன், கால்வினியம், பிரெஸ்பைடேரியன், அனபாப்டிஸ்ட் என்றெல்லாம் பிரிவுகள் தோன்றி எல்லாவற்றுக்கும் மொத்த அடையாளமாகக் கத்தோலிக்கத்திலிருந்து விலகி வந்த கூறுகள் புராட்டஸ்டன்ட் என்று பொதுப் பெயரிட்டு அழைக்கப் படலாயின.

மார்டின் லூதர் தொடக்கத்தில் கத்தோலிக்க சபைக்கு மாற்றாக நிறுவிய சீர்திருத்தக் கிறிஸ்தவ சபை இன்றளவும் லூதரன் ஆலயம், லூதரன் சபை (லூதரன் சர்ச்) என்றெல்லாந்தான் அழைக்கப் படுகிறது. அவர்களின் சீர்திருத்தக் கோட்பாடு லூதரனியம் என்று அடையாளப் படுத்தப் படுகிறது.

*(தொடரும்)*


மத அரசியல் - அத்தியாயம் (08)

_____________________________
எழுத்து : C.P.சரவணன்  
பகிர்வு : 
____________________________
*இஸ்லாம்*

இஸ்லாம் என்றால் ‘அடிபணிவதை” சரணடைவதை அல்லது “தன்னையே ஒப்படைத்துவிடுதல்” என அர்த்தப்படுகிறது. ”முஸ்லீம்” என்றால் இஸ்லாமைக் கடைபிடிப்பவர் என்று பொருள். மற்ற மதங்களை இன்னின்னார் உருவாக்கினார்கள் என்பது எவ்வளவு தவறோ அதே தவறுதான் இஸ்லாமை முகம்மது நபி உருவாக்கினார் என்று சொல்வதும்.
*முகம்மது நபி (Muhammad)*

முகம்மது நபி  (Muḥammad), அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim), கிபி 570, 8, ஜூன்-இல் சவூதி அரேபியாவில் மக்கா நகரில் பிறந்தார். இவர் குரைஷி வம்சத்தில் பிறந்தவர். இவரது தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து சிறிய தந்தை அபூ தாலிபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40-ஆவது வயதில் நபித்துவம் பெற்று இறை தூதுகள் கிடைக்கத் துவங்கின. அதன் பின்னர் அவர் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டினார்.

இவரே அராபியத் தீபகற்பம் முழுமையும் இஸ்லாம் என்ற ஒரே மதத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல், பாபிஸ்துகள், மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்றும் இறைவாக்கினர் என்றும் போற்றப்படுகிறார். உலக அளவில் முஸ்லிம்கள் முகம்மதுவை கடவுளால் மனித உலகிற்கு அனுப்பப்பட்ட கடைசி இறைவாக்கினர் என நம்புகின்றனர்.

*கஅபா (Caaba)*

அரேபியர்களின் வீரமும், போர் விருப்பமும் தொன்மையானவை. அயம்-அல்-அரபு என்ற வரலாற்றுப் புத்தகமாம், நபிகள் தோன்றுவதற்கு முன்பே அரேபியர்கள் 1700 போர்களில் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. தங்களுக்குள் ஓய்வில்லாமல் சண்டையிட்டுக் கொண்டாலும் குறைஷி அரேபியப் பழங்குடியினர் மெக்காவிற்கு அருகிலிருந்த கஅபா (Caaba) கோயிலில் தான் இறைவணக்கமும் உயிர்பலியும் செய்து வந்தனர். " கஅபா" வில் உள்ள கருமையான கல் புனித சின்னமாய் போற்றி வழிபடப்படுகிறது. இந்தக் கல்லின் பெயர் 'ஹஜ்ர அஸ்வத்' என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பழங்குடியின் முக்கிய குடும்பமாகத் திகழ்ந்த ஹசிமைட் (Hashemites) குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இருந்தது. ஹசிமைட் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்  “இறைவன் ஒருவரே” என அறைக் கூவல் விடுத்தார்.

*கஅபா*

குறைஷி பழைமைவாதத்திலிருந்து ஒவ்வொரு குடும்பமாக விலகி “ஹசீம்” குடும்பத்தாரோடு இணைந்து கொண்டனர். விசுவாசப் படையின் தளபதிகள் என்ற பட்டத்தைப் பெற்ற இவர்கள் மெக்காவைக் கைப்பற்றி, மெக்கா நகருக்குள் கடவுள் நம்பிக்கையற்ற யாரும் நுழையக்கூடாது என்று சட்டம் இயற்றினர். கஅபா கோயிலின் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டு முகம்மதுவின் கடவுளுக்கான புனித தலமாக மாற்றப்பட்டது.

இப்ராகிம் நபிகளும் அவரது மகன் இஸ்மாயில் நபிகளும் ஒருசேர முயற்சி செய்து கஅபாவை கட்ட ஆரம்பித்தார்கள். கஅபாவை கட்டி முடித்த நிலையில் தான் இப்ராகிம் நபிகள் மேலே சொல்லப்பட்டுள்ள பிரார்த்தனையை ஓதினார்கள். அன்று முதல் இன்று வரை கஅபா புனிதமிகு ஆலயமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகம் அழியும் காலம் மட்டும் அது பாதுகாக்கப்படும் என்பதும் உறுதி.  அதிலும் மாபெரும் ஆச்சரியம், எந்த கனிவர்க்கமும் விளைய முடியாத அந்த பாலைவனத்தில் வருடம் முழுவதும் எல்லாவிதமான கனி வகைகளும் கிடைத்து வருவது என்பது அவர்கள் பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்பட்டதன் அடையாளமாக உள்ளது.

அதன் பின் கஅபா தன்னுடைய நிலைத்த தன்மையை இன்று வரை இழக்கவே இல்லை. முகம்மது நபி அவர்களின் காலத்தில் கி.பி.630 ஜனவரியில், மக்கா வெற்றியைத் தொடர்ந்து கஅபாவில் இருந்த 360 சிலைகள் அகற்றப்பட்டு யாத்திரிகர்களின் புனித தலமாக மாற்றப்பட்டது. கருங்கற்களால் கட்டப்பட்ட கஅபாவின் உயரம் 50 அடி, நீளம் 40 அடி, அகலம் 25 அடி. ருக்னுல் அஸ்வத், ருக்னுல் யாமானி, ருக்னுல் ஷாமி, ருக்னுல் ஹிந்த் என்ற நான்கு மூலைகள் கொண்ட கட்டிடமாக கஅபா உள்ளது.

*மக்காமா இப்ராகிம்*

இப்ராகிம் நபிகள் கஅபாவை கட்ட ஆரம்பித்த போது அதன் உயரம் அதிகரித்ததால் ஒரு கல்லின் மீது நின்று அதனை கட்ட ஆரம்பித்தார்கள். அப்போது கட்டிடத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க அந்த கல்லும் தன் உயரத்தை அதிகரித்துக் கொண்ட வந்தது. இவ்வாறு கஅபா கட்ட அந்தக் கல்லும் இப்ராகிம் நபிகளுக்கு உதவி புரிந்ததாக வரலாற்று குறிப்பு உள்ளது.

இப்ராகிம் நபிகள் நின்ற அந்த கல்லில் அவ ரது பாதம் பதிந்த சுவடு அப்படியே நிலைத்து விட்டது. அந்த கல்லோடு அவர்களின் பாத சுவடு களும் பாதுகாக்கப்பட்டு இன்றுவரை ‘மக்காமா இப்ராகிம்’ என்று கொண்டாடப்படுகின்றது.

*திருமறை அல் குர்ஆன்*

அளவிலாக் கருனையும் இனையில்லாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால், இதுவே திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாகிய, அதாவது சூறாவாகிய அல் ஃபாத்திஹா ஆகும். சுமார் 40 வயதில் ஒரு நபியாக (Prophet) ஆகும்படியான அழைப்பை பெற்றார். மக்காவில் உள்ள கார் ஹிரா ( Ghar Hira) எனும் மலைக் குகையில், முகம்மது அவர்கள் வருடத்தின் பெரும் வாரங்களை, பிரார்த்தனை செய்து கழிப்பது வழக்கம். முகமது நபி முதன்முதலாக பெற்றுக் கொண்டதாக சொல்லப்படும் வெளிப்படுத்துதல் “அல் அலக்” (இரத்தக் கட்டி) என்ற தலைப்புள்ள சூறா-96 என இஸ்லாமிய அறிஞர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கின்றனர்.

கிபி 610-ஆம் வருடம், இதேப்போல் முகமது அம்மலைக்குச் சென்றபோது, காப்ரியல் முதலாவதாகத் தோன்றியப்பின், முகமது பெரும் துயரத்திற்கு ஆளானார். வீடு திரும்பிய முகமதுவை அவரது மனைவி கதீஜா மற்றும் அவரது கிறிஸ்த்துவ நண்பரான வரக்கா இப்னு நஃபல் இருவரும் ஆறுதல் படுத்தினர். காப்ரியல் தோன்றியதை கண்டு முகம்மது அஞ்சவில்லை என்றும், மேலும் அவர் அந்த நிகழ்வை முன்பே அறிந்ததுபோல அந்த தூதரை வரவேற்றதாகவும் ஷியா வரலாறு கூறுகிறது. கப்ரியலின் முதல் தோற்றத்திற்கு பின்பு மூன்று வருடங்களுக்கு மறுதோற்றம் நடக்கவில்லை, இந்த காலக்கட்டத்தை ஃபத்ரா என்கின்றனர். இக்காலக்கட்டத்தில் முகமது தொழுதல் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுப்பட்டு வந்தார். காப்ரியலின் மறுதோன்றாலுக்குப் பின் இயல்பு நிலைக்கு திரும்பினார் முகமது. கப்ரியல் அவரை பார்த்து "உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை." எனக்கூறி மதபோதகம் செய்யச் சொல்லி தூதர் அறிவுறுத்தினார்."மணியடிப்பதுப்போல வாசகங்கள் தோன்றின" என முகமது கூறியதாக புகாரி ஹதீஸ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முகமது (ஸல்)  அவர்களுக்கு வழங்கிய திருமறை அல் குர்ஆன் இஸ்லாத்திற்கு ஒரு முழு வடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது. இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் குர்ஆன் ஆகும்.  அது ஸ்-ல்-ம் என்னும் மூன்று அரபி எழுத்துகளில் இருந்து உருவான ஒரு வினைப் பெயர்ச் சொல். ஏற்றுக்கொள்ளுதல், ஒப்படைத்தல், கீழ்ப்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். இதன் அர்த்தம் கடவுளை ஏற்றுக்  கொண்டு, தம்மை அவனிடம் ஒப்படைத்து, அவனை வழிபடுவது என்பதாகும்.

கடவுள் ஒருவனே அவனே அல்லாஹ். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பது இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கை ஆகும். அல்லாஹ் என்பது கடவுள் என்ற பொருள் கொண்ட பால்வேறுபாடு காட்டாத ஒரு படர்கைச் சொல்.  இது அரேபிய நாடோடிக் குழுக்கள்,  தங்கள் தெய்வத்தைக் குறிக்க பயன்படுத்திய சொல் என்பது குறிப்பிடத்தக்கது.

குரானை பெற்றுக் கொள்ள சுமார் 20 முதல் 23 (கி.பி.610-கி.பி.632) ஆண்டுகள் எனச் சொல்லப்படுகிறது. பேப்பர் தயாரிக்கும் முறையை அப்போது அரேபியர்கள் அறிந்திருக்கவில்லை. ஆகவே, அப்போது கிடைத்த ஒட்டகத்தின் தோள்பட்டை, எலும்புகள், பனை ஓலை, மரத்துண்டுகளை செய்திகளை எழுதி வைக்கச் செய்தார்.

*மக்காவிற்கு பல பெயர்கள்* 

1.மக்கா, 2.பக்கா, 3.அல் பைத்துல் ஹராம் (புனித மிக்க வீடு), 4.அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 5.உம்முல் குரா (நகரங்களின் தாய்), 6.உம்மு ரஹீம் (கருணையின் தாய்), 7.அல் மஃமூன் (பாதுகாக்கப்பட்டது), 8.அல் காதிஸ் (பாவங்களை விட்டும் தூய்மையாக்கக் கூடியது), 9.அல் பைத்துல்.

இறைவனை நம்புவதன் மூலம் அவனது கட்டளைப்படி நடந்தால், முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களைப் பெற முடியும் என்பது இஸ்லாமின் உறுதியான நம்பிக்கை, இறை வணக்கம்,  நோன்பு,  கட்டாயப் பொருள்தானம்,  மெக்காவை நோக்கிய புனிதப் பயணம் ஆகியவை இஸ்லாமின் கட்டாயக் கடமை.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் முகமது முதலாக இறைவனால் அனுப்பப்பட்ட இறை தூதர்களில் இறுதியானராக முகமது நபி அடையாளப்படுத்தப்படுகிறார். நூஹ் (அலை) நோவா-இப்ராகிம் (அலை) அபிரகாம் - இஸ்மாயில் (அலை) தாவூத் (அலை) முசா (அலை), மோசஸ் - ஈசா (அலை),  இயேசு ஆகியோரும், பிற இறை தூதர்களும் உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அனைவருமே ஒரே நெறியைத்தான் போதித்ததார்கள். இதே சங்கிலித் தொடரில் வந்தவரே முகமது (ஸல்)

*மதீனா வாழ்க்கை*

“குரேஷ்” என்னும் பூசாரிகள் முகம்மது நபியைக் கொல்லத் திட்டமிட்டதால், கி.பி.614-இல் மக்காவை விட்டு, யஸ்ரிபுரிக்குச் சென்றுவிட (ஹிஜ்ரத்) நேர்ந்தது. இதன் நினைவாகவே “ஹிஜ்ரி ஆண்டு” கொண்டாடப்படுகிறது. 

முஹம்மது நபி நபித்துவம் வழங்கப்பட்டு பதினான்காம் வருடம் இறைவனின உத்தரவுப்படி தன் உற்ற தோழர் அபூபக்கர்ருடன் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) குடிபெயர்ந்து சென்றார். இந்த ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட கி.பி. 622-ஆம் வருடம் இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டது. மதீனா நகரில் அனைத்து மக்களும் முகம்மது நபியை வரவேற்றனர். முகம்மது நபி தமது ஒட்டகம் சென்று அமர்ந்த அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்கருகிலுள்ள இடத்தில் தமது தங்குமிடத்தை அமைத்தார்.

முகம்மது நபி தமது தங்குமிடத்திற்கு அருகில் தொழுகைக்கு கட்டியப் பள்ளிவாசல் அல்-மஸ்ஜித் அந்-நபவி (முகம்மது நபி கட்டிய பள்ளிவாசல்) என்று அழைக்கப்படுகிறது. இது முஸ்லிம்களின் இரண்டாவது புனிதத் தலமாகும். மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களுக்கும் மதீனா நகர அன்சாரிகளுக்கும் சகோதரத்துவ ஒப்பந்தம் ஏற்படுத்தினார். மேலும் மதீனா யூதர்களுடன் நட்புறவு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.

முகமது நபிக்கு முன்னர் வந்த இறை தூதர்களான மூசாவிற்கு தவ்ராத் என்னும் வேதமும், தாவூத்திற்கு சபூர் என்னும் வேதமும் ஈசாவிற்கு இஞ்சில் என்னும் வேதமும் இறைவனால் கொடுக்கப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது.

விதி எனப்படுவது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது.  அதன் புரிதல் இறைவனுக்கு மட்டுமே உண்டு என்று நம்புவது இஸ்லாமின் முக்கியக் கடமை. விதியைப் பற்றி சிந்திப்பதையோ அல்லது அதைப் பற்றி தர்க்கம் செய்வதையோ குரான் தடுக்கிறது.

மேலும் தன்னைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியவை ஐந்து கடமைகள் என்று இஸ்லாம் கூறுகிறது.  இதனை இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் என்று அழைக்கின்றனர்.  அவை கலிமா, தொழுகை, நோன்பு,  ஜகாத், ஹஸ். குலிமா என்பது இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றும், முகமது நபி இறைவனது தூதராக இருக்கிறார் என்றும் நம்புவதாகும். இதனை நம்பி சாட்சி பகர்ந்தால் மட்டுமே ஒருவர் முஸ்லீம் ஆகிறார்.

தொழுகை என்பது வயது வந்த அனைத்து முஸ்லீம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாவைத் தொழ வேண்டும் மனநோயாளிகள், சிறுவர்கள், மாதவிடாய் காலத்துப் பெண்கள் ஆகியோருக்கும் மட்டுமே இதிலிருந்து விதிவிலக்கு உண்டு.  பயணம் செய்கிறபோது தொழுகைகளைச் சேர்த்து தொழுவதற்கும் குறைத்து தொழுவதற்கும் இஸ்லாம் அனுமதியளிக்கிறது.

நோன்பு என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் அனுசரிக்கப்படுவது. அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பிருந்து, சூரியன் மறையும் வரை உண்ணாமல் இருக்க வேண்டும். தண்ணீர்கூட அருந்தக் கூடாது மது, புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் அறவே கூடாது. ஜகாத் என்பது வளர்ச்சி அடைதல், தூய்மைப்படுத்துதல் என்பனவாகும். வசதி படைத்தோர் தங்கள் செல்வத்தில் நான்கில் ஒரு பங்கினை ஏழைகளுக்குக் கொடுப்பதாகும். ஏழைகளுக்கும், கடன்பட்டோர்க்கும், தங்கள் தேவையைத் தாங்களே பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.

ஹஸ் என்பது இஸ்லாமியர்களுக்கான புனித யாத்திரையைக் குறிப்பிடுவது. பொருளாதார வசதியும், உடல் வலிமையும் இருக்கும் நிலையில் மெக்காவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும். மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை உணர்த்து வதற்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நிறத்தால், இனத்தால், மொழியால் எவரும் ஒருவரைவிட ஒருவர் உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ இல்லை என்பதும் இறைவன் முன்னால் அனைவரும் சரிசமம் என்று உணர்ந்து அவனை அடிபணிதல் வேண்டும் என்பதையும் கற்றுக் தருகிறது. இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தின் 8 முதல் 12 வரை கடைப்படிக்கப்படும் ஹஜ் வசதி இல்லாதோரை வற்புறுத்துவது இல்லை.

*(தொடரும்)*


மத அரசியல் - அத்தியாயம் (09)

_____________________________
எழுத்து : C.P.சரவணன்  
பகிர்வு : 
_____________________________
*ஃபிகா / ஃபிக்ஹ் (FIQH)*
நபிகள் உயிர் வாழ்ந்த வரைக்கும் குரானும், அவருடைய வாக்குமே எல்லாப் பிரச்னைகளையும் தீர்க்கப் போதுமானவையாக இருந்தன. நபிகள் மறைவுக்குப் பின், அவருடைய நடவடிக்கைகள் சுன்னத் அல்லது நன்னடத்தை அத்தாட்சிகளாகக் கருதப்பட்டன. ஃபிகா எனும் மத நூல் இஸ்லாமிய உப சட்டங்களாக கருதப்படுகிறது. ஃபிக்ஹ் என்பதன் அடிப்படைப் பொருள் – ஆழமாக ஒன்றைப் புரிந்து கொள்ளுதல் என்பதாகும்.
*இமாம் அபூஹனீஃபா (ரஹ்) (கி.பி.699-767) (Abū Ḥanīfa al-Nuʿmān)*

இமாம் அபூஹனீஃபா மெசபடோமியாவிலுள்ள கஃபாவைச் சேர்ந்தவர். இவரைப் பின் தொடர்பவர்களை “ஹன்ஃபீ” என்கின்றனர். இந்தியாவில் இவர்களே அதிகம். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம் என்பதை அறியாமல், எங்கள் சொல்லை எடுத்து நடப்பது ஹலால் இல்லை. (ரஸ்முல் முஃப்தீ)

‘ஒவ்வொரு புதிய வி'யத்தையும் விட்டுவிடுங்கள். அவைகள் பித்அத்கள் ஆகும். எங்களை கண்மூடிப் பின்பற்றாதீர்கள். அல்குர்ஆனையும், ஹதீஸையுமே பின்பற்றுங்கள்.’ (நூல்: மீஸானுல் குப்ரா பாகம்-01, பக்கம்-58 )

‘அல்லாஹ்வுடைய வேதத்திற்கும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் மாற்றமாக நான் ஒன்றைச் சொன்னால் என்சொல்லை விட்டுவிடுங்கள். அல்குர்ஆனையும், ஹதீஸையுமே  பின்பற்றுங்கள்.’ (நூல்: ஈகாழுல் ஹிமம், பக்கம்-50)

‘என்னுடைய ஆதாரத்தை அறியாதவன், என்சொல்லைக் கொண்டு  மார்க்கத்தீர்ப்பு அளிப்பது ஹராம்.’ (நூல்: மீஸான் ‘ஃரானி பாகம்-01, பக்கம்-55)

‘ஓர் ஆதாரப்பூர்வமான நபிமொழி கிடைத்தால் எனது வழிமுறைக்கு மாற்றமாயிருந்தாலும் அதனை  (நபிமொழி  யை)யே  பின்பற்றுங்கள்.’ (நூல்: ஆலம்கிரியின் முன்னுரை பாகம்-01, பக்கம்-12) என இமாம் அபூஹனீபா அவர்கள் கூறுகின்றார்கள்:

*இமாம் மாலிக் (ரஹ்) (கி.பி.715-795) (Malik ibn Anas)*

இமாம் மாலிக் மதீனாவைச் சேர்ந்தவர். இவரை பின்பற்றுபவர்கள் “மாலிகீ’ எனப்படுகின்றனர். ஸ்பயினிலும் மொராக்கோவிலும் முதலில் முஸ்லீம்கள் அனைவரும் “மாலிக்கீ’ களாக இருந்தனர். இமாம் மாலிக் நபிகள் வாக்கியங்களை (ஹதீஸ்), மதத்தைப் பற்றிய முடிவுகள் எடுக்கும் போது, மிக அதிகமாக அடிப்படையாகக் கொண்டார். இதன் விளைவாக இஸ்லாமிய பண்டிதர்கள் நபிகள் வாக்கியங்களைத் திரட்ட ஆரம்பித்தனர். பிற்காலத்தில் இவர்கள் செல்வாக்கு மிகுந்த குழுவாக “அஹ்லே ஹதீஸ்’ எனப்பட்டனர்.

நான் (சில நேரங்களில்) சரியாகவும் (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன்;. எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்! அவற்றில் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் பொருத்த மில்லாதவற்றை விட்டு விடுங்கள். (உஸுலுல் அஹ்காம் ப:294 பா:6)  நான் சிலவேளைகளில் சரியாகவும், சிலவேளைகளில் பிழையாகவும் முடிவெடுக்ககூடிய ஒரு மனிதன். எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள். அல்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் உட்பட்டவைகளை  எடுத்துக் கொள்ளுங்கள். அல்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாற்றமானவைகளை விட்டுவிடுங்கள்.’ (நூல்: ஈகாழுல் ஹிமம், பக்கம் 62) என இமாம் மாலிக் கூறுகிறார்கள்

*இமாம் ஷாஃபயீ (ரஹ்)  (கி.பி 767-820) (Abdullāh Muhammad ibn Idrīs al-Shāfiʿī)*

ஷாஃபயீ காஸாவில் பிறந்தவர். “ஷாஃபயீ” என்னும் மூன்றாவது மதநூல் பிரிவை ஏற்படுத்தினார். இக்குழு நபிகளின் நன்னடத்தையை வலியுறுத்துகிறது. எனது நூலில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானதைக் கண்டால், நபி (ஸல்) அவர்களின் வழி முறையையே (மக்களிடம்) கூறுங்கள், என் கூற்றை விட்டு விடுங்கள். (அல்மஜ்மூஃ பாகம் – 1 பக்கம் – 63) என இமாம் ஷாஃபயீ கூறுகிறார்கள்.

*இமாம் அஹ்மத் பின் ஹன்பல்  (Ahmad ibn Hanbal)*

அஹ்மத் பின் ஹன்பல் “ஹம்பலியா’ என்னும் நான்காவது பிரிவைத் தோற்றுவித்தார். இப்பிரிவு கடவுளை உருவமுடையவராகக் கருதுகிறது.

‘ஆதாரபூர்வமான நபிமொழிகளையே பின்பற்றுங்கள். யார் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை விட்டுவிட்டு மற்றவர்களின் அபிப்பிராயங்களை பின்பற்றுகின்றார்களோ அவர்கள் அழிவின் விளிம்பில்தான் இருக்கின்றார்கள்.’ (நூல்: இப்னுல்கய்யிம் பாகம் 02, பக்கம் 302)

*இஸ்லாம் தத்துவப் பிரிவுகள்*

1.மோத்ஜலா பிரிவு
இப்பிரிவினைத் தோற்றுவித்தவர் அல்லாப் ஆவார். இவர்களின் கொள்கைகள்:

1.ஜீவன் செயலாற்றுவதில் சுதந்திரம் படைத்தது
2.கடவுள் நல்லவைகளுக்கு மட்டுமே பிறப்பிடமானவர்
3.கடவுள் குணநலன்களற்றவர்
4.கடவுளின் சர்வ வல்லமை எல்லைக்குட்பட்டது
5. கடவுளின் அற்புதங்கள் என்பது தவறாகும்
6. உலகம் தொன்றுதொட்டு இருப்பதல்ல
7.குரானும் அனாதியானதல்ல
மோத்ஜலா பிரிவை அல்லாஃப் அபுல் ஹூஸைல் அல் அல்லாஃப், நஜ்ஜாம், ஜஹீஜ், முவம்மர், அபூ ஹாஷிம் பஸ்ரீ போன்ற ஆசாரியர்கள் போற்றி வந்தனர்.

2.கராமி பிரிவு 
இப்பிரிவை நிறுவியவர் ஈரான் ஸீஸ்தானைச் சேர்ந்த முகம்மது பின் கரீம் ஆவார். மோத்ஜலா பிரிவினர் குரானை தம்மிச்சைப்படி விளக்கியதைப் பார்த்து, முஸ்லீம் பக்தர்கள் வரவிருக்கும் அபாயத்தை உணர்ந்து மோத்ஜலீக்களுக்கு எதிராக குரலெழுப்பினர். ஆலுல் இப்னகராம் கடவுளை ஒரு மனிதராகவே-மன்னராகவே பிரகடனப்படுத்தினார்.


3.அஷரி பிரிவு
மோத்ஜலிக் குடும்பமொன்றில் பிறந்தவர் அபுல் ஹஸன் அஷரி (கி.பி873-935). அஷரி பிரிவினரின் சில கொள்கைகள்:

1. காரண-காரிய விதியை மறுத்தல்
2. கடவுளின் குரலான “குரான்” ஒன்று மட்டுமே அத்தாச்சி
3. கடவுள் அனைத்து விதிகளுக்கும் அப்பாற்பட்டவர்

*கிழக்கிந்திய இஸ்லாமிய அறிஞர்கள்*

1.அஜூத்தின் ராஜி (கி.பி.923)
மேற்கு ஈஇரானிலுள்ள “ரே” நகரத்தில் பிறந்தவர்.
2. அபூயாகூப் கீந்தி (கி.பி.870)
கிந்தா எனும் அரேபிய இனக்கூட்டத்துடன் தொடர்புடையவர். 
3. அபூநஸ்ர ஃபாராபி (கி.ப்870-950)
ஃபாரபி ஆமூ நதிக்கரயிலிருந்த வஸிஜ்ஜில் ஒரு சிறு கோட்டையில் படைத்தளபதியாக அபூ நஸ்ரவின் தந்த இருந்தார். கீந்திக்குப் பிறகு இஸ்லாமிய தத்துவ வளர்ச்சியில் முக்கிய இடம் வகிப்பவர்.
4. பூவலி மஸ்கவியா (கி.பி 1030)
சுல்தான் அதூதத்தௌலாவின் பொருள் காப்பாளராக இருந்தவர்.
4. பூவலி ஸீனா (கி.பி 980-1037)
பூவலி புகாராவுக்கு அருகில் அப்ஷனில் பிறந்தவர். இவரது ஷஃபா 2. இஷாராத 3. நஜாத் முக்கிய நூல்கள்.

*புனித சங்கம்*

மோத்ஜலாஅ, கராமி, அஷரி ஆகிய மூன்று பிரிவினருமே தத்துவயியலுக்கு துரோகம் புரிந்தவர்கள். அதன் பின் பஸ்ரா நகரில் பலமான ஆதரவாளர்கள் தோன்றினர்.
1, முதிய இப்ன மைமூன் (கி.பி,850)
2.முகத்தஸீ
3.ஜஞ்ஜானி
4.நஹ்ராஜூரி
5.அபுஃபீ
6.ரிஃபாவ்

*மதவாதத் தத்துவ அறிஞர்கள்*

முகமது கஜாலி (கி.பி. 1059-1111)
கஜாலி கி.பி.1050 இல் தூஸ் (ஸீஸ்தான்) நகரின் தாஹிரானில் பிறந்தவர். கஜாலியில் மிகச்சிறந்த நூல்கள் 1. தோஹபதுல் ஃபிலாஸஃபா 2. அஹ்யாவும் உலூம் ஆகும்

*அபூபகர் முகமத் இப்ன பாஜா (கி.பி 1130)*

இப்ன பாஜா ஸ்பெயினில் ஸர்கோஸா நகரில் பதினொன்றாம் நூற்றாண்டு இறுதியில் பிறந்தவர். இவரது “தத்பீருல் முத்வஹ்ஹத்”, ஹயாதுல் மோத்ஜல் போன்ற நூல்கள் முக்கியமானவை.

*அபூவலீத் முகமத் இப்ன ரோஷ்த் (கி.பி1126-1198)*

இப்ன ரோஷ்த் கி.பி1126 –இல் ஸ்பெயினில் கார்தோவாவில் பிறந்தவர். ரோஷ்த் தத்துவ நூல்கள் 28, மருத்துவம் 20, மத நூல் 8, தர்க்கவியல் 6, ஜோதிடமும் கணிதமும் 4, அராபிய இலக்கணம் 2 ஆக 68 நூல்கள் எழுதியுள்ளார்.

*மூஸா இப்ன மைமூன் (கி.பி 1135-1208)*

இப்ன மைமூன் ரோஷ்த பிறந்த கார்த்தோவாவில் பிறந்தவர். இவர் யூத குடும்பத்தில் பிறந்தவர்.

*யூசுப் இப்ன யஹ்யா (கி.பி.1191)*

இவர் மொராக்காவைச் சேர்ந்த யூதர். ரோஷ்த் நூல்களைப் பரப்புவதில் தன் கடமையைச் செய்தார்.

*இப்ன கல்தூன் (கி.பி 1332)*

வட ஆப்ரிக்காவிலுள்ள டூனிஸ் நகரில் பிறந்தார். ஜீவன் இயற்கையாகவே ஞானமற்றது என்று கருதுகிறார்.

*786*

இறைவனின் திருப்பெயரை போற்றும் 'பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்' என்ற இஸ்லாமியர்களின் அரபு வார்த்தைக்களுக்கான எண்களின் கூட்டுத்தொகைதான் (Numeric value) 786.


*(தொடரும்)*


மத அரசியல் - அத்தியாயம் (10)

_____________________________
எழுத்து : C.P.சரவணன் 
பகிர்வு : 
_____________________________
இஸ்லாம் மதத்தை மக்களிடையே பரப்பிய முகம்மது நபி, இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மதீனா நகரை தலைநகராகக் கொண்டு ஒரு இஸ்லாமியப் பேரரசை நிறுவினார். அந்தப் பேரரசை மிகத் திறம்பட ஆட்சி செய்த அவர்கள் 632-ம் ஆண்டு, ஜூன், 8 ஆம் நாள் காலமானார். அதன் பிறகு அந்த அரசை யார் நிர்வகிப்பது என்ற கேள்வி எழுந்தது. அப்போது அபூபக்கர் என்பவர், மற்ற முஸ்லிம்களால் முழுமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முகம்மது நபிக்கு மிகவும் பிரியமான நண்பரும், முகமது நபிக்கு பெண் கொடுத்த மாமனாரும் ஆவார். மேலும் முகம்மது நபியின் வாழ்நாளிலேயே, அனைத்து இடங்களிலும் அவருக்கு அடுத்த அதிகாரத்தில் இருந்தது இவரே ஆகும். இவரே முஸ்லிம்களின் முதல் கலீபா ஆவார். இவருக்குப் பிறகு உமர் என்பவர் இரண்டாவது கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஷிதீன் கலீபாக்கள் பேரரசு, உமய்யா கலீபாக்கள் பேரரசு போன்றவைகள் ஆட்சி செய்தது.

இதற்கிடையில், அதிருப்தி அடைந்த ஒரு கூட்டத்தினர் இவருக்குப் பிறகு முகம்மது நபியின் மருமகன்களில் ஒருவரான அலி என்பவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினர். இவர்கள் ஷீஆ அல் -அலி கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். ஆனால் அலியை விட மூத்தவரான முகம்மது நபியின் மற்றொரு மருமகன் உதுமான் என்பவர் அடுத்த கலீபாவாக வரவேண்டும் என்று பெரும்பான்மையான முஸ்லிம்கள் விரும்பினர். இதன் பேரில் சிலர் கூடி அலியின் சம்மதத்தோடு உதுமானை மூன்றாவது கலிபாவாக தேர்ந்தெடுத்தனர். பின்பு கடைசியாக உதுமானின் மறைவுக்குப் பிறகு அலி நான்காவது கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது ஆட்சிக் காலத்தில் இவருக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்திக் கூட்டம் ஒன்று உருவாகியது. இவர்கள் காரிஜிய்யா கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் உதுமான், முகம்மது நபி அவர்களுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை மக்களிடையே பரப்பினார். மேலும் முகம்மது நபி மிகவும் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத் தொடங்கினர். இதனால் அதிருப்தி அடைந்த ஷீஆ அல்-அலி கூட்டத்தார் பதிலுக்கு அலியை மிகவும் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத் தொடங்கினர். மேலும் முகம்மது நபியினை திட்டவும் தொடங்கினர். இதனால் கோபமுற்ற மற்ற, காரிஜிய்யா கூட்டத்தார் அல்லாதவர்களும் ஷீஆ அல்-அலி கூட்டத்தாரை வெறுக்கத் தொடங்கினர். இவர்கள் தங்களை காரிஜிய்யா மற்றும் ஷீஆ அல்-அலி கூட்டத்தாரிடம் இருந்து வேறுபடுத்தி உதாரண நபிவழி கூட்டம் என பொருள் படும்படி சன்னி முஸ்லிம் என அழைத்துக்கொண்டனர். இவ்வாறே சன்னி இஸ்லாம் பிரிவு தொடங்கியது.

*சன்னி முஸ்லீம் (Sunni Islam)*

உலகின் மொத்த இஸ்லாமிய மக்கள் தொகையில் 75 முதல் 90  கதவீதம் பேர் சன்னி முஸ்லீம்களாகவே உள்ளதால்,  இதுவே மிகப் பெரிய பிரிவாக அமைந்துள்ளது.  சுன்னத் என்பதில் இருந்து சன்னி என்னும் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது முகமதைப் பின்பற்றுதல் என்பது இதன் பொருளாகும். ஈராக் ஈரான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளைத் தவிர்த்து மற்ற அனைத்து இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளிலும் சன்னி முஸ்லீம்களே பெரும்பான்மையாக உள்ளனர்.

அல்லாஹ் ஒருவனே ஏக இறைவன், அவனால் அருளப்பட்டது குர்ஆன், அவனது இறுதித் தூதர் முஹம்மது நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படையை எல்லா பிரிவுகளும் இவைகளை ஏற்றுக் கொள்கின்றன. சன்னிகளுக்கும் ஷியாக்களுக்கும் அல்லாஹ் ஒருவனே; குர்ஆனும் ஒன்றே; இறுதித் தூதரும் ஒருவரே; மக்கா இறையில்லமும் (கஅபா) ஒன்றே.

ஆனால், தொழுகைக்கான அழைப்பில் (பாங்கு) சிறிய வித்தியாசம். 'அல்லாஹு அக்பர்' என்று தொடங்கும் பாங்கின் பொருள், இறைவன் மிகப் பெரியவன்! வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. முஹம்மது இறைவனின் தூதர். தொழ வாருங்கள். வெற்றி பெற வாருங்கள்' என்பது. இதில், ஷியாக்கள் மேலும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்கிறார்கள். 'முஹம்மது நபி அல்லாஹ்வின் இறுதித்தூதர்; அவரது வாரிசு அலி' என்பதே அவ்வாசகம்.

*ஷியா முஸ்லீம் பிரிவு (Shia Islam)*

ஷியா முஸ்லீம் பிரிவு இஸ்லாமிய உட்பிரிவுகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.  இது உலகின் மொத்த இஸ்லாமிய மக்கள் தொகையில் 10 முதல் 20 சதவீதத்தைப் பெற்றுள்ளது.  ஈராக்,  ஈரான்,  ஓமன் ஆகிய நாடுகளில் ஷியா பிரிவினரே பெரும்பான்மையாகக் காணப்படுகின்றனர்.

இதில் இன்னும் அதிகமான உட்பிரிவுகளும் உள்ளன.  ஆவற்றில் பன்னிருவர் பிரிவு முதலிடத்தை வகிக்கிறது.  இதன் அநேக நடைமுறைகள் சன்னி முஸ்லீம்களின் நடைமுறைகளோடு ஒத்துப் போகின்றன.  மேலும், இஸ்மாலி,  செய்யதி போன்ற இன்னபிற பிரிவுகளும் உள்ளன.

ஐந்து வேளைத் தொழுகையை, மூன்று வேளைகளில் (இரண்டை ஒரே வேளையில்) தொழுது விடுகின்றனர் ஷியாக்கள். தொழுகையில், ஸஜ்தா எனும் சிரம் பணியும் நிலையில், 'காகே ஷிபா' எனப்படும் புனித கர்பலாவின் மண்ணால் செய்யப்பட்ட 'சில்' (ஓடு) ஒன்றை வைக்கிறார்கள். சன்னிகள் இவ்வாறு செய்வதில்லை. தமது வருவாயில் இரண்டரை சதவீதத்தை ஜகாத் (ஏழை வரி அல்லது கொடை) தர வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் விதிக்கப்பட்ட கடமை. பணக்காரர்களின் செல்வத்தில் ஏழைகளுக்கு உரிய பங்கு இது. ஷியா முஸ்லிம்கள், இந்த இரண்டரை சதவீத ஜக்காத்துடன், மொத்த ஆண்டு சேமிப்பில் 20 சதவீதத்தை கும்ஸ் ஆகத் தர வேண்டும்.

*ஸூஃபி பிரிவு (Sufism)*

ஈரான், எஸ்ஃபஹான் இல் உள்ள சூஃபி மசூதி

“ஸோஃபி’ என்பது கிரேக்க மொழிச் சொல்லாகும். எட்டாம் நூற்றாண்டில் கிரேக்கத் தத்துவ இயல் மொழி பெயர்க்கப் பட்ட பொழுது “ஸோஃபி” என்ற சொல் “தத்துவம்” என்ற பொருளில் அராபிய மொழியில் பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் “ஸூஃபி’ என உருமாறிவிட்டது

சூபிசம் என்பது முகமது நபி மறைந்து  இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்டது.  இக் கருத்துக்களை எகிப்தைச் சேர்ந்த தன் நூன் என்பவர் விளக்கினார். அத பி ஷேக் முகைதீ இப்னுவல் அரபி  என்பவர் விளக்கினார். இஸ்லாமிய ஆட்சியாளர்களின் பகட்டான ஆட்சி முறையை எதிர்த்து தொடங்கப்பட்டதே சூபிசம்.துறவறம், தவம்,  இசை ஆகியவற்றின் மூலமாகவே இறைவனை அடைய முடியும் என்பது இவர்களின் நம்பிக்கை.  இவ்வாறாக இறைவனை அடைந்தவர்கள் சூபிகள் என்று அழைக்கப்பட்டனர். 

சூஃபி விடுதலை பெறுவதற்கு 1. ஷரியத் 2. த்ரீக்கத் 3. மாரிபத் 4. ஹக்கத் என நான்கு படிகளைக் குறிப்பிடுகிறது.

*அஃகுமதிய்யா முஸ்லிம் சமாஅத் (Ahmadiyya Muslim Community)*

அஃகுமதிய்யா முஸ்லிம் சமாஅத் அல்லது சமாஅத் அஃகுமதிய்யா என்பது 1889 ஆம் ஆண்டில் அம்ரித்சரைச் சேர்ந்த மிர்சா குலாம் அகமது (1835-1908) என்பவரால் நிறுவப்பட்ட அகமதியா இயக்கத்தில் இருந்து உருவான இரண்டு பிரிவுகளில் ஒன்றாகும். நிறுவனரின் இறப்புக்குப் பின்னர் அகுமதிய்யா இயக்கம் இரண்டாகப் பிரிந்தது. மற்றைய சமூகம் இலாகூர் அகுமதிய்யா இயக்கம் என அழைக்கப்படுகிறது. இப்பிரிவினர் “காதியானிக்கள்” என்று பரவலாக அழைக்கப்பட்டாலும் இச்சொல் தங்களை இழிவு படுத்துவதாகக் கூறுகின்றனர். (காதியான் என்பது மிர்சா குலாம் அகமது பிறந்த ஊர்).

இவர்கள் மிர்சா குலாம் அகமதை இறைத்தூதர் எனக்கூறுவதால் மற்ற இசுலாமிய பிரிவுகளான சியா இசுலாம் சன்னி இசுலாம் இவர்களை முசுலிம்களாக ஏற்றுக்கொள்வதில்லை. அகுமதிய்யா முசுலிம் சமூகத்திற்கு மிர்சா மசுரூர் அகமது என்பவர் இப்போது தலைவராக உள்ளார். இன்று இந்த இயக்கம் உலகளாவிய அளவில் 198 நாடுகளில் இவரது தலைமையின் கீழ் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சென்னை, சாத்தான்குளம், மேலப்பாளையம் போன்ற சுமார் 22 இடங்களில் இந்த இயக்கம் செயல்பட்டு வருகின்றது.

*இபாதி*

இசுலாத்தின் ஆரம்பகாலங்களில் தோன்றிய காரிசியாக்கள் எனப்படும் அடிப்படைவாத குழுவின் ஒரு பிரிவே இபாதி ஆகும். இவர்கள் இன்றளவும் ஓமன் நாட்டில் பெரும்பான்மையினராக உள்ளனர்.

*குரானிசம் (Quranism)*

நபிமொழி நூல்களின் வழிமுறைகளை தவிர்த்து, குரானின் கோட்பாடுகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு வாழ்பவர்கள் இவர்கள்.

*யசானிசம் (Yazdânism)*

12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக் அதி இப்னு முசாஃபிர் (Sheikh Adi ibn Musafir) என்பவரால் முன்னெடுக்கபட்ட வழிமுறை இது. குர்தியர்களின் தொன்ம நம்பிக்கைகள் மற்றும் சூபிசத்தின் கூருகள் ஆகியவற்றின் கலவையாக இது உள்ளது.
இசுலாம் தேசம் - இது ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க சமய மற்றும் பண்பாட்டு அமைப்பு ஆகும். அமெரிக்காவின் நிறவெறி மற்றும் கிறித்தவத்துக்கு எதிராக இது 20ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது.

*ரோஹிங்கியா(Rohingya)*

மியான்மரைப் பொறுத்தவரை ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவியுள்ளதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது . மியான்மரில் 4 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக சில புள்ளி விவரங்கள் கூறுகின்றது. அங்கு பிரதான மூன்று முஸ்லிம் பிரிவினர்கள் இருக்கின்றார்கள் .
01) பான்தாய்கள் ( பர்மிய பூர்வீகக் குடிகள் )
02) பஷுஷ் ( சீனா , தாய்லாந்து பூர்வீகத்தினர் )
03) ரோஹிங்கியா ( இந்தியா , பங்களா தேஷ் பூர்வீகத்தினர் )

*தமிழக முஸ்லீம் பிரிவுகள்*

*லெப்பை*

தென்னிந்தியக் கடற்கரைப்பிரதேசங்களில் வசிப்பவரான தமிழ்ப்பேசும் முகம்மதியர்

லெப்பை, தக்கினி முஸ்லிம், மரைக்காயர், ராவுத்தர், மாப்பிள்ளை, பட்டாணி, (பத்ஹான்கான்) காக்கா, சேட், சையது, ஷேக், பீர், தாவூத், அன்சாரி, நவாப் உள்ளிட்ட முஸ்லிம்கள் பிரிவுகள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருக்கின்றன.

*நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள்*

உலகின் மிகப் பழமையானதாக கருதப்படும் திருமறை- உதுமான் காலத்தது. சன்னி முஸ்லிம்கள் திருமறை மற்றும் முகம்மது நபியின் வழியை மட்டும் பின்பற்றுகின்றனர். திருமறையில் அல்லா கூறிய வாழ்க்கை, வழிபாடு, சட்ட முறைகள் மற்றும் முகம்மது நபியின் வழிகாட்டுதல் ஆகியவற்றை மற்றும் தங்கள் வாழ்க்கையில் மேற்கொள்கின்றனர். இவர்களின் நம்பிக்கைப் படி முகம்மதே நபி. அலி ஒரு ஸஹாபி (நபி தோழர்) மட்டுமே அன்றி வேறு எந்த தெய்வ சக்தியும் கொண்டவர் அல்லர். மேலும் முகம்மது நபி குடும்பத்தாருக்கும் தெய்வ சக்தி கிடையாது என்பது அவர்களின் கூற்றாகும்.
முஹம்மது நபிகளாருக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளராக (கலீபா) யாரை ஏற்பது என்பதில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, முஹம்மது நபிகளாரின் நெருங்கிய தோழரும், மாமனாருமான அபுபக்கரைத்தான் முதல் கலீபாவாக சன்னிகள் ஏற்கின்றனர். ஆனால், ஷியா பிரிவினரோ, முஹம்மது நபிகளின் மற்றொரு தோழரும் மருமகனுமான அலியே பெருமானாரின் வாரிசு என்கின்றனர். இதில் தொடங்கிய சர்ச்சை பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. முகலாய மன்னர் பாபர் டெல்லியில் நடைபெற்ற ஒரு போரில் தோல்வி அடைந்து மற்றொரு இசுலாமிய மன்னரிடம் உதவி கேட்டபோது, சன்னி பிரிவைச் சேர்ந்த பாபரை ஷியா பிரிவிற்கு மாறினால் தான் உதவுவேன் என்று கூறிய வரலாறும் உள்ளது.

சன்னி-ஷியா முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டும் நிகழ்வு மொஹரம் ஆகும். ஷியாக்கள், மொஹரத்தைத் துக்க அனுஷ்டிப்பாக முக்கியத்துவம் தந்து கடைபிடிக்கிறார்கள். சென்னையில் மொஹரம் நாளில் மார்பில் கைகளால் ஓங்கி அடித்தபடி, தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலம் செல்வதைப் பலரும் பார்க்கலாம். இந்த ஊர்வலத்தை நடத்துவோர் ஷியா முஸ்லிம்கள் தான்.

*தர்கா (Dargah)*

தர்கா என்பது பொதுவாக சூஃபிச துறவிகளின் கல்லறைகளின் மீதே கட்டப்படுகிறது. இது மசூதி, பள்ளிகள், மருத்துவமனை போன்ற கட்டிடங்களைக்கொண்டே இருக்கும். இது ஒரு சூஃபிச வழிபாட்டு இடம் ஆகும்.

*பள்ளிவாசல்/ மஸ்ஜித்/மசூதி (Mosque)*

பள்ளிவாசல் என்பது, இஸ்லாமியர்களது வணக்கத் தலமாகும். தமிழில் இதனைப் பள்ளி என்றும் அழைப்பதுண்டு. சிலர் இதன் அரபி மொழிப் பெயரான மஸ்ஜித் என்பதையும் பயன்படுத்துகிறார்கள். மஸ்ஜித் என்பதன் தமிழ் திரிபு மசூதி ஆகும், பள்ளிவாசல்கள் பலவகையாக உள்ளன. தனியாருக்குரிய சிறிய பள்ளிவாசல்கள் முதல் பலவிதமான வசதிகளைக் கொண்ட பெரிய பொது பள்ளிவாசல்கள் வரை உள்ளன.

*(தொடரும்)*

No comments:

Post a Comment